மருத்துவ மனையில்நோயாளியை பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ் எஸ்.ஐ.சஸ்பெண்ட்
ராசிபுரம்: அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் , பிற்பட்டோர் காலனியில் வசிப்பவர் குப்புசாமி மகன் செந்தில் (31) சலவை தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 8.30 மணிக்கு இவரது அம்மா சந்திராவைச் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது செந்திலுக்கும், அவரது தம்பி காமராஜ் என்பவருக்கும், குடும்ப பிரச்னை தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது. அது முற்றி இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இந்த சண்டையில் செந்தில் மண்டை உடைந்து ரத்தம் குபுகுபுவென கொட்டியது. இதையடுத்து அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து விசாரணை நடத்த, ராசிபுரம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.இராஜேந்திரன், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். விசாரணை நடத்திக் கொண்டிருந்த அவர் திடீரென செந்திலை தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்து அடித்துள்ளார். இதில் செந்தில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
தகவல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து, சிறப்பு எஸ்.ஐ. இராஜேந்திரனை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். இந்த கொடுமையான சம்பவம் குறித்து, தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த எஸ்.பி.ராஜன் நியமிக்கப்பட்டார். அவர் ராசிபுரம் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையிலிருந்த செந்திலிடம் விசாரணை நடத்தினார். பிறகு, டி.எஸ்.பி., ராஜன் அளித்த அறிக்கைப்படி, நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணம்மாள், சிறப்பு எஸ்.ஐ. ராஜேந்திரனை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications