விறுவிறுப்பாக நடந்த மறு வாக்குப்பதிவு- சேலம் 76 % நாமக்கல் 84%
சேலம்: நாமக்கல் தொகுதிகளுக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நிறைவு பெற்ற மாலை 6 மணி நிலவரப்படி 84.6 சதவீதமும், சேலம் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் 76.81 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த 24ஆம் தேதியன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, சேலம் தொகுதியில் செங்கலணை சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.

இதேபோல், நாமக்கல் தொகுதிக்குட்பட்ட கோட்டப்பாளையம் வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை 7 மணிக்கு மறு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்த வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் ஏற்கனவே பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஏற்கனவே நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்கு வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டதால், இன்று வலது கை நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மழை ஏற்பட்டாலும் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டாமல் இருக்க போதிய முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.
இந்த தேர்தலில் மாலை 6 மணி இறுதி நிலவரப்படி நாமக்கல் தொகுதிக்குட்பட்ட கோட்டப்பாளையம் வாக்குச்சாவடியில் 84.6 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இதேபோல் சேலத்தில் புற்றுமாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள 213வது வாக்குச்சாவடியில் நடந்து வரும் மறுவாக்குப்பதிவில் 76.81சதவீதம் வாக்குகள் பதிவாகின. வெயில் இல்லாத காரணத்தால் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications