நாங்க ரெடி... நீங்க...? விவாதத்திற்கு வா வா என அதிமுகவை அழைக்கும் முரளிதரராவ்
சென்னை: அதிமுக அரசில் நடக்கும் ஊழல்கள் குறித்து தன்னுடன் நேரடி விவாதம் நடத்த விடுத்த அழைப்பிற்கு அதிமுகவினர் இன்னும் பதில் சொல்லவில்லை என பாஜக தமிழக மேலிட தேர்தல் பார்வையாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
பாஜக பிரச்சார பாடல்கள் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழக மேலிட தேர்தல் பார்வையாளர் முரளிதரராவ் சி.டி.க்களை வெளியிட, அதனை மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முரளிதரராவ், "ஜெயலலிதாவை எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவரது அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை என்றும் நான் சொல்லி இருந்தேன். மேலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி முடங்கி போய்விட்டது என்றும் குற்றம் சுமத்தி இருந்தேன்.
பா.ஜனதாவின் இது போன்ற குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை பதில் இல்லை மேலும் அ.தி.மு.க. அரசில் நடக்கும் ஊழல்கள் குறித்து என்னுடன் நேரடி விவாதத்திற்கும் அழைத்தேன். அதற்கும் அவர்கள் பதில் சொல்லவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பேசும் போது, ‘‘தமிழ்நாட்டில் மின்தடை இல்லை'' என்று கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. எத்தனை மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அ.தி.மு.க.வுடன் நான் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். அவர்கள் தயாரா? மின்சார உற்பத்தியில் அ.தி.மு.க. அரசு தோல்வி அடைந்துவிட்டது. மின் கொள்முதலில் ஊழல் நடந்து உள்ளது. பொய்யான தகவல்களை சொல்லி ஜெயலலிதா மக்களை ஏமாற்றி வருகிறார்.
அ.தி.மு.க. அரசின் மோசமான நிர்வாகத்திற்கு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பே ஒரு உதாரணம். சென்னையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவில்லை. அதே போல் குடிநீர் வசதிகள் சரியாக செய்யவில்லை" என இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்தார்.