நடிகை கே.ஆர். விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது
கோவை: பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல நடிகை கே.ஆர். விஜயாவின் மகள் ஹேமலதா(47). கணவரை பிரிந்த அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். அவரின் 2 மகன்களும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.

இந்நிலையில் கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கதிர்வேல்(41) என்பவர் ஹேமலதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் நிலம் வாங்குவது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் நிலம் வாங்குவது தொடர்பாக அவர் ஹேமலதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஹேமலதா தனியாக வசிப்பதை தெரிந்து கொண்ட கதிர்வேல் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அடிக்கடி ஹேமலதாவுக்கு போன் செய்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்துள்ளார். கே.ஆர். விஜயா வீட்டு மருமகன் ஆக வேண்டும். நீங்கள் சரி என்றால் என் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன். நீங்கள் இல்லாவிட்டாலும் உங்களின் சித்தி மகளையாவது திருமணம் செய்ய விரும்புகிறேன் என கதிர்வேல் தெரிவித்துள்ளார். இதை கண்டித்த ஹேமலதாவை அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஹேமலதா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் கதிர்வேல் மீது புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கதிர்வேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications