தவறான சிகிச்சையால் செத்துட்டான்.. ஆக்ஷன் எடுங்க.. சாவுக்கு நீதி கேட்கும் தம்பதி!
2 நாய்கள் மரணம் அடைந்ததால், தம்பதி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை: "ஆசையாக வளர்த்து இப்படி பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்... தவறான சிகிச்சையால்தான் அவன் உயிரிழந்துவிட்டான்... அவன் சாவில் சந்தேகம் உள்ளது, விசாரணையை உடனே எடுங்கள்" என்று ஒரு தம்பதி போலீஸ் ஸ்டேஷனில் கண்ணீரும் கம்ப்ளைண்டுமாக நின்றனர்.
வளர்த்து, ஆளாக்கி, தவறான சிகிச்சையால் உயிரிழந்து, பறிகொடுத்தது தம்பதி வீட்டின் செல்லக்குட்டி கிடையாது. அது ஒரு நாய்க்குட்டி!! ஆமாம்... நாயை காணோம் என்று புகார் வரும், ஆனால் நாயின் சாவில் சந்தேகம் என புகார் வந்தது இப்போதுதான்!!
மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தம்பதி மோசஸ்-லிடியா. மோசஸ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள். 8 வருஷத்துக்கு முன்னாடி மோசஸின் நண்பர் ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்து கொடுத்தார். அதனை ஆசையாக வாங்கி கொண்ட இந்த தம்பதி பாப்பு என பெயர் வைத்தனர். பிறகு அந்த பாப்பு 7 குட்டிகளை ஈன்றது. அதில் ஒன்றை வைத்துக் கொண்டு மீதமிருந்த 6 குட்டிகளையும் பிறருக்கு கொடுத்துவிட்டனர்.

பாப்பு, புஜ்ஜி
பாப்புடன் சேர்த்து, அந்தக் குட்டியையும் தம்பதி அவ்வளவு செல்லமாக வளர்த்தனர். அதற்கு புஜ்ஜி என பெயரிட்டனர். தன் 2 குழந்தைகளுக்கு இணையாக புஜ்ஜியும் அந்த வீட்டில் வளர்ந்தது. மேலும் அக்கம் பக்கம் வீடுகளிலும் இந்த புஜ்ஜி ரொம்ப ஃபேமஸ்.இரண்டு நாள் முன்பு பாப்புவுக்கும், புஜ்ஜிக்கும் உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு. கடுமையான ஜூரம் வந்துவிட்டது. அதனால் இரண்டையும் எடுத்துக்கிட்டு சைதாப்பேட்டை அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு போனாங்க.

அடுத்தடுத்து மரணம்
அங்கிருந்த டாக்டர்கள், இரண்டு நாய்களையும் ஆய்வு செய்து பாப்புவுக்கு 3 ஊசியும், புஜ்ஜிக்கு ஒரு ஊசியும் போட்டனர். பின்னர் 2 நாய்களையும் வீட்டிற்கு தம்பதி அழைத்து வந்துவிட்டனர். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நாய்களும் இறந்தன. இதனால் தம்பதி கடும் அதிர்ச்சியடைந்தார்கள். பாப்புவும், புஜ்ஜியும் இப்படி அடுத்தடுத்து சாகும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் இருவருமே கதறி அழுதனர்.

போலீசில் புகார்
பாப்புவை வீட்டில் கிடத்தி அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது லிடியா அழுவதை பார்த்து அந்த பகுதி மக்களும் கண்கலங்கினர். பிறகு, வீட்டின் அருகில் குழிதோண்டி பாப்புவை புதைத்தனர். இதுகுறித்துதான் புகார் அளிக்க தம்பதி குமரன் நகர் போலீஸ் ஸ்டேஷன் சென்றனர். "டாக்டர் அளித்த சிகிச்சை மீது சந்தேகம் இருக்கின்றது. அதனால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.

நீதி கிடைக்குமா?
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், புதைக்கப்பட்ட நாய்களை தோண்டியெடுத்து வேப்பேரியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் இரண்டு நாய்களும் எப்படி இறந்தன என தெரியவரும் என கூறப்படுகிறது. பாப்பு, புஜ்ஜிமா மரணத்துக்கு நீதி கிடைக்குமா?












Click it and Unblock the Notifications