அடிப்படை விஷயம் கூட தெரியாமல் வேட்பு மனு தாக்கல் செய்த பாமக வேட்பாளர்கள்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த பாமக வேட்பாளர்கள் மூவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. மிகப் பெரிய காரணங்களுக்காக அவை நிராகரிக்கப்படவில்லை. மாறாக மிக மிக சாதாரண காரணத்திற்காகவே அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இது கூடவா தெரியாமல் பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர் என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது.

திருச்செந்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த பாமக வேட்பாளர்களின் மனுக்கள் நேற்று பரிசீலனைக்குப் பின்னர் நிராகரிக்கப்பட்டன. இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரத்தில் அப்துல் லத்தீப் என்பவர் பாமக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை 10 பேர் முன்மொழிந்திருந்தனர். ஆனால் 10வது நபர் தனது பெயர், விவரத்தைக் குறிப்பிடாமல் கையெழுத்து மட்டும் போட்டிருந்தார். இதனால் லத்தீப்பின் மனு நிராகரிக்கப்பட்டது.
தூத்துக்குடி தொகுதியில் மனு செய்திருந்த சேஷய்யா பர்னாந்து தனது வேட்பு மனுவில் பாகம் எண்ணை மாற்றி எழுதி விட்டார். இதனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.
திருச்செந்தூர் தொகுதியில் மனு செய்திருந்த உஜ்ஜல் சிங்கின் வேட்பு மனுவில் 10 பேருக்குப் பதில் 9 பேர்தான் முன்மொழிந்து கையெழுத்திட்டிருந்தனர். இதனால் அவரது மனுவும் தள்ளுபடியாகி விட்டது.
மிக மிக சாதாரண காரணங்களால்தான் இவர்கள் மூவரின் மனுக்களும் தள்ளுபடியாகியுள்ளது பாமக தரப்பில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications