சென்னை விமானநிலையத்தில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ‘ரெட் கார்பெட்’ வரவேற்பு
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வரும் முதலீட்டாளர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் படுகிறது.
சென்னை வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் முதலீட்டாளர்கள் சென்னைக்கு வந்தபடி உள்ளனர்.
இவர்களுக்கென பிரத்யேகமாக சென்னை விமான நிலையத்தில் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை விமான நிலையத்தின் இயக்குனர் தீபக் சாஸ்திரி கூறியதாவது:-
பிரத்யேக வரவேற்பு...
இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு முதலீட்டை கொண்டு வரும் நிகழ்ச்சி என்பதால் இதற்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். வெளிநாட்டு தொழில் அதிபர்கள் எந்த விதத்திலும் முகம் சுழித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கென்று பிரத்யேக வரவேற்பு மேஜைகள் அமைத்துள்ளோம்.
சிறப்பு கவுண்டர்கள்...
குடியுரிமை, சுங்கம் போன்ற விவகாரங்களை வரிசையில் நிற்காமல் அதற்கான சிறப்பு கவுண்ட்டர்களில் உடனே சரிபார்த்துக்கொள்ளலாம். அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்ல, தனி கார்கள், தனி அலுவலர்கள் அமர்த்தப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள் சிரமமின்றி விமான நிலையத்தை கடந்து செல்வார்கள்.
அழகு படுத்தப்பட்ட விமான நிலையம்...
மேலும், விமான நிலையத்துக்குள் விளம்பர பதாகைகள், சுற்றுலா பகுதிகளின் அழகிய படங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவற்றையும் வைத்து அழகுபடுத்தியுள்ளோம். 8-ந் தேதி (நேற்று) பிற்பகல் வரை 150 வெளிநாட்டு தொழில் அதிபர்கள் வருகை தந்தனர்.
சிவப்பு கம்பள வரவேற்பு...
வெளிநாட்டில் இருந்து நேரடி விமானம் மூலமாக சென்னையில் இறங்கும் தொழில் அதிபர்கள் வெளியே செல்வதற்கு சிவப்பு கம்பளம் விரித்த பிரத்யேக வெளிவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்தி...
இதுவரை வந்த வெளிநாட்டு தொழில் அதிபர்கள் அனைவருமே திருப்தியாக வெளியே சென்றனர்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.