ரூ.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பதுக்கல்: பறிமுதல் செய்வது எப்போது?
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பறிமுதல் செய்யாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்ட எஸ்பி அலுவலகம் அருகே உள்ள மாதவன் நகரில் கடந்த மே 1ம் தேதி ஒரு குடோனில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னரை எஸ்பி அஸ்வின் கோட்னிஷ் தலைமையிலான போலீசார் சோதனையிட்டு அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மெட்ரிக் டன் எடையிலான ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இவை தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய்க்கு கடத்தப்பட இருந்த நிலையில் போலீசாரின் நடவடிக்கையால் தடுக்கப்பட்டது. இந்த வழக்கை போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே மேலும் 4 கன்டெய்னர்களில் செம்மரக்கட்டைகள் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டு புறநகர் பகுதிகளில் உள்ள குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவற்றின் மதிப்பு ரூ.40 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு கன்டெய்னரில் வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆவணங்களை போலியாக சமர்ப்பித்து செம்மரக்கட்டைகளை மறைத்து கடத்திச்செல்ல இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அதற்குள் கடத்தல் புள்ளிகள் சுதாரித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கன்டெய்னரை விட்டு தப்பி சென்று விட்டனர். சுங்கத்துறையினர் கன்டெய்னரை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த செம்மரகடதத்தலில் அமெரிக்க ஆயுத கப்பலில் தொடர்புடைய சிலருக்கு தொடர்பு இருப்பது கூட தெரிந்தும் வனத்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் தொடர்பு இல்லாத சிலரை கைது செய்ததாக புகார் எழுந்தது.