காரைக்குடியில் எச் ராஜா தோற்றதற்கு யார் காரணம்?.. நாங்களா?.. உண்மையை உடைத்த நீக்கப்பட்ட நிர்வாகிகள்
காரைக்குடி: காரைக்குடி சட்டசபை தொகுதியில் எச் ராஜா தோல்வி அடைந்ததற்கு அவரது மருமகனும் உறவினர்களுமே காரணம் என கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 3 நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாஜக தேசிய குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த எச் ராஜா, பெரியாரை விமர்சித்ததாக அவரது பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பதவியேதும் இல்லாமல் அவர் பாஜக ஆதரவாளராகவே உள்ளார்.
தற்போது காரைக்குடியில் உள்ளார். இவருக்கு கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

எச் ராஜா
இதையடுத்து தமிழக சட்டசபைத் தேர்தலிலும் எச் ராஜாவுக்கு காரைக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து எச் ராஜா தோல்வியை சந்தித்திருந்தாலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றதால் இவர் வெற்றிக் கனியை சுவைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தோல்விக்கு காரணம்
ஆனால் இவர் தோல்வி அடைந்தார். இவரது தோல்விக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளே காரணம் என்ற ஒரு புகாரை தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் செலவுக்காக பாஜக தலைமை கொடுத்த ரூ 13 கோடி நிதியை எச் ராஜா சொந்த செலவுக்கு பயன்படுத்திவிட்டதாக பாஜக தலைமைக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் புகார் அனுப்பினர்.

எச் ராஜா
இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் எச் ராஜா மீது புகார் கூறிய காரைக்குடி மண்டல தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டலத் தலைவர் பிரபு ஆகிய 3 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் அறிவித்தார்.

சந்திப்பு
இதையடுத்து இவர்கள் மூவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் புகார் தெரிவித்த எங்களிடம் விசாரிக்காமல் எச் ராஜாவிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் நிர்பந்தித்தன் காரணமாகவே எங்களை நீக்கிவிட்டனர்.

நிதி
தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் அவரது மருமகனும் ஆர்எஸ்எஸ் நிர்வாகியுமான சூர்ய நாராயணன் மற்றும் அவரது உறவினர்கள் இருந்தனர். எனவே எச் ராஜாவின் தோல்விக்கு அவரது மருமகனே காரணம்.

தமிழகத்தில் தாமரை
அடிமட்ட தொண்டர்களை எச் ராஜா அனுசரித்து செல்லாமல் இருந்தால் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது. எச் ராஜாவால் வார்டு தலைவர் பதவியில் கூட வெல்ல முடியாது என காட்டமாக தெரிவித்தனர். இதனால் எச் ராஜா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கமா என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications