விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு பின்னணியில் ரிலையன்ஸ்? பரபரப்பு தகவல்கள் அம்பலம்
' ஓர் அமைச்சர் இப்படியெல்லாம் செய்வாரா?' என டெல்லி பா.ஜ.க நிர்வாகிகளின் கவனத்துக்குப் புகார் கொண்டு சென்றது ரிலையன்ஸ் நிர்வாகிகள். அதன் விளைவுகள்தான் ரெய்டு ரூபத்தில் வெளியாகியுள்ளது.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று நடைபெற்ற ஐடி ரெய்டு பின்னணியில் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே.நகரில் உற்சாகமாக தேர்தல் பணியைத் தொடங்கிய அமைச்சர்கள், அடுத்தடுத்து நடக்கும் ரெய்டுகளால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ' எப்போது வேண்டுமானாலும் ரெய்டு நடக்கலாம் எனத் தகவல் வந்துள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு யாரும் போனில் பேசிக் கொள்ள வேண்டாம். வீட்டுப் பக்கமே தலைகாட்ட வேண்டாம்' என உறவினர்களை எச்சரித்துள்ளனர் அமைச்சர்கள்.

சேகர் ரெட்டி மீது ரெய்டு
தமிழக அரசின் மணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்த காலத்திலேயே, 'அமைச்சர் விஜயபாஸ்கர் வளைக்கப்படுவார்' என்ற தகவல் வெளியானது. ஆனால், அடுத்த வந்த நாட்களில் அதுகுறித்த எந்த சுவடுகளும் தென்படவில்லை. அமைச்சர்களும் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பணிகளை கவனித்து வந்தனர்.

தினகரனின் வலது கரம்
நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து நடந்த ரெய்டுகளின் பின்னணி பற்றித்தான் அ.தி.மு.கவினர் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மிக நெருக்கமாக வலம் வந்த விஜயபாஸ்கர், தற்போது தினகரனின் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். கடந்த ஐந்தாண்டுகளாக சுகாதாரத்துறையில் விஜயபாஸ்கர் வைத்ததுதான் சட்டமாக இருந்தது.

கூவத்தூர் டூ ஆர்.கே.நகர்
"கடந்த இரண்டு ஆட்சியிலும் செல்வாக்கு மிக்க அமைச்சராக வலம் வருகிறார். கூவத்தூரில் தொடங்கிய அவரது ஆட்டம் ஆர்.கே.நகர் வரையில் நீண்டு வருகிறது. அவர் மீதான ரெய்டு நடவடிக்கைகள் வேகம் பெறுவதற்கு முக்கியமான சில காரணங்களும் இருக்கின்றன" என விவரித்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், " தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கட்டட பணிகளை எடுத்துச் செய்து வந்தது விஜயபாஸ்கரின் ஆட்கள்தான். பராமரிப்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய்களை பில் போட்டு எடுத்துவிட்டனர்.

உயிர்காக்கும் கருவிகளிலும் லஞ்சம்
மருத்துவமனைகளுக்குத் தற்காலிக பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்த விவகாரத்திலும் பெரும் பணம் விளையாடியது. அதேபோல், உயிர் காக்கும் கருவிகள் முதற்கொண்டு மருத்துவமனைக்குத் தேவையான கருவிகளை வாங்குவது தொடர்பான 800க்கும் மேற்பட்ட டெண்டர்களைக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. காரணம். கருவியின் விலையைவிட துறையின் உயர் பொறுப்பில் இருந்தவர் கேட்ட லஞ்சப் பணம் அதிகம் என்பதுதான்.

முக்கிய டெண்டர்
சுகாதாரத்துறை வெளியிடும் ஒப்பந்தப் புள்ளிகளில் விஜயபாஸ்கர் உத்தரவில்லாமல் எதுவும் நடக்காது. இதையெல்லாம், துறையின் செயலரும் மௌனமாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் இருந்து முக்கிய டெண்டர் ஒன்று வெளியானது. இந்த டெண்டருக்கு ரிலையன்ஸ் உள்பட பல கம்பெனிகள் ஒப்பந்தம் கோரியிருந்தன. குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனம் அந்த மருந்துக்கு சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்று வைத்திருந்தது.

புகார் கூறிய ரிலையன்ஸ்
டெண்டரில் ரிலையன்ஸ் நிறுவனத்தையே விஜயபாஸ்கரின் ஆட்கள் ஓரம்கட்டிவிட்டனர். ' ஓர் அமைச்சர் இப்படியெல்லாம் செய்வாரா?' என டெல்லி பா.ஜ.க நிர்வாகிகளின் கவனத்துக்குப் புகார் கொண்டு சென்றது ரிலையன்ஸ் நிர்வாகிகள். அதன் விளைவுகள்தான் ரெய்டு ரூபத்தில் வெளியாவதாக சந்தேகிக்கிறோம்" என விவரித்தவர், " சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு என ஆளும்கட்சிக்கு நெருக்கமான புள்ளிகளை கார்டனுக்கு அறிமுகப்படுத்தியதில் விஜயபாஸ்கரின் பங்கு மிக முக்கியமானது. ஆளும்கட்சியை ஒட்டுமொத்தமாக வளைக்கும் விதமாகவே மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்கிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications