பெரும் போராட்டம் எதிரொலி.. வக்கீல்கள் சட்ட திருத்த விதியை நிறுத்தி வைத்தது ஹைகோர்ட்!
சென்னை: வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கறிஞர்கள் சட்டத்தில் கடந்த மே மாதம் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் நீதிமன்றத்தை புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் காசிராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, நீதிபதிக்கு எதிராக கை நீட்டி, உரத்த குரலில், நீதிபதியை மிரட்டும் விதமாக வழக்கறிஞர்கள் வாதம் செய்யக் கூடாது. அவ்வாறு வாதம் செய்யும் வழக்கறிஞர்களை, வழக்கறிஞர்கள் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்ய ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்குள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை உறுதி செய்ய முடியும் என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கின் இடைக்கால மனுவில் அவர் கூறியிருந்ததாவது, அனைத்து நீதிமன்றங்களிலும் கேமரா பொருத்தும் வரை, வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்த விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர். மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது,
வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட திருத்த விதிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுதாரர் இடைக்கால கோரிக்கையை கேட்டுள்ளார். ஆனால், இந்த கோரிக்கையே பயனற்றதாகி விட்டது.
ஏன் என்றால், மனுதாரரின் கோரிக்கையை கடந்த 16-ம் தேதியே ஐகோர்ட்டு அனைத்து நீதிபதிகள் கூட்டத்திலேயே முடிவு செய்து விட்டோம். அதாவது, புதிய சட்டதிருத்த விதிகளின்படி, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று முடிவு செய்துவிட்டோம்.
இதன் பின்னர், இந்த புதிய சட்டவிதிகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட குழுவும் இதே முடிவினை கடந்த 22-ம் தேதி எடுத்துள்ளது. இந்த முடிவினை விளக்கமாக கடந்த 23-ம் தேதி பத்திரிகைகளுக்கு அறிக்கையாகவும் கொடுக்கப்பட்டது. எனவே, புதிய சட்ட திருத்த விதிகள் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications