சென்னை வந்து குவிந்துள்ள நிவாரணப் பொருட்களை வினியோகிப்பதில் பிரச்சனை: உதவி தேவை
சென்னை: சென்னை மக்களுக்கு அளிக்க நிவாரணப் பொருட்களுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ள குழுக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு அளிக்க உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், உடை, போர்வை, மருந்துகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தென்மாவட்டங்கள், சேலம், பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான குழுக்கள் வாகனங்களில் சென்னை வந்தடைந்துள்ளன.
வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் எந்த பகுதியை தேர்வு செய்து செல்வது, எங்கே உதவி செய்வது என்று தெரியாமல் உதவி குழுக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளன. எந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர் என்று தெரியாமல் திணறுகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவையும் இல்லாததால் அந்த குழுக்களால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் நிவாரணப் பொருட்கள் சென்னை வந்தடைந்தும் மக்களை சென்றடைய கால தாமதம் ஆகியுள்ளது.
அதிகாரிகள் அல்லது மக்களுக்கு உதவி செய்து வரும் நடிகர் சித்தார்த் குழுவினர் இந்த குழுக்களை அணுகி வழிநடத்தினால் பேருதவியாக இருக்கும். பசியால், குளிரில் வாடும் மக்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் சென்னை மக்களுக்காக பிற மாவட்ட, மாநில மக்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.