அம்மா முதல்வராக பண்ணாரி அம்மனுக்கு தீ மிதித்த அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
ஈரோடு: பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். தமிழக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் லோக்சபா தொகுதி எம்.பி சத்யபாமா ஆகியோர் அம்மா முதல்வராக வேண்டி பயபக்தியோடு தீ மிதித்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா மார்ச் 23ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வான குண்டம் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அம்மனை அழைத்து, வரம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு, சருகு மாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது. அதிகாலை 3.55 மணிக்கு பூசாரி ராஜசேகர் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். தொடர்ந்து, படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், திருப்பூர் லோக்சபா உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுபடவும் மீண்டும் முதல்வராகவும் வேண்டி பயபக்தியோடு தீ மிதித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மா.வீரசண்முகமணி, சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் ஆகியோரும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சி மாலை 5.30 வரை நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, கால்நடைகள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.












Click it and Unblock the Notifications