கிருஷ்ணகிரி பெண்கள் சிறைக் கைதி மரணம்... என்ன நடந்தது? - வீடியோ
கிருஷ்ணகிரி பெண்கள் சிறையில் கைதியாக இருந்த ரேணுகா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சிறைச்சாலையில் பெண்கள் சிறையில் இருந்த நாமக்கல்லைச் சேர்ந்த பெண் கைதி மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதனால் சிறை வளாகமே பரபரப்பாக உள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள சிறைச்சாலையில் பெண்களுக்கென்று தனிப்பிரிவு உள்ளது. இங்கு நாமக்கல்லைச் சேர்ந்த ரேணுகா என்பவர் கைதியாக இருந்தார். ரேணுகா சில ஆண்டுகளுக்கு முன், போலி பத்திரம் தயாரித்து ஜாமீன் கையெழுத்து போட்ட குற்றத்துக்காக கைதாகி சிறையில் இருந்தார்.
இவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறை நிர்வாகம் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளது. அங்கு ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் குணமடைந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
இதையடுத்து, அவரை சிறைக்கு திரும்ப அழைத்து வந்துள்ளனர். ஆனால் நள்ளிரவில் ரேணுகாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் இறந்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.