சென்னை ராமாபுரத்தில் காசிமேடு மீனவர் குழுவால் நூற்றுக்கணக்கானோர் மீட்பு
சென்னை: சென்னை - ராமாபுரம் வெள்ளம் சூழந்த பகுதிகளில் கடந்த இரு நாட்களாக காசிமேடு மீனவர் குழுவால் ஏறத்தாழ 500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் ராமாபுரத்தின் சத்யா நகர், ராயலா நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தன. அந்தப் பகுதிகளில் புதன்கிழமையன்று நள்ளிரவு வரை முதல் மாடி அளவில் வெள்ளம் சூழ்ந்தன. தரைதளத்தில் உள்ளவர்கள் முதல் மாடி, இரண்டாவது மாடிகளில் தஞ்சம் புகுந்தனர்.

ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் உள்ள காதுகேட்காதோர், வாய் பேச முடியாதோர் பள்ளியில் சிக்கியிருந்த சுமார் 100 மாணவர்களை போலீஸார் பாதுகாப்பாக படகுகள் மூலம் மீட்டனர்.
அதேநேரத்தில், நேற்று மாலை முதலே சென்னை காசிமேடு அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் கொண்ட குழு 6 படகுகள் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் 500க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இன்று மாலை நிலவரப்படி, சத்யா நகரின் பெரும்பாலான இடங்களில் இடுப்பளவு தண்ணீரும், உள் பகுதியில் மார்பளவு தண்ணீரும் தேங்கியிருந்தன. செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பதால், ராமாபுரம் பகுதியில் வெள்ளம் வெகுவாக வடிந்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 48 மணி நேர கனமழை விவரத்தைக் கூறி, அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்துக்கு படகுகள் மூலம் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ராமாபுரம் பகுதி முழுவதும் தொடர்ந்து மின்சாரம், செல்போன் நெட்வோர்க் முடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications