புதுச்சேரியில் மீண்டும் கனமழை: 2 பேரிடர் மீட்புக்குழுக்கள் ஒடிசாவிலிருந்து வருகை
புதுச்சேரி: விடாது கொட்டிய கனமழையால் புதுச்சேரி மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.புதுச்சேரிக்கு இரு பேரிடர் மீட்புக்குழுக்கள் ஒடிசாவிலிருந்து இன்று வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் கனமழை கொட்டிவருவதால் மழைவெள்ளத்தை சமாளிக்க முடியாமல் திணறும் சூழல் உருவாகியுள்ளது.
வங்கக் கடலில் ஏற்கெனவே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 20 நாள்களாக புதுவையில் பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி விட்டன. பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் தற்போது மீண்டும் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்ததாழ்வு நிலையால் பலத்த மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரத்தின்படி 303 மி.மீ. மழை பதிவானது. இதனால் புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடானது.
அங்குள்ள ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், கிழக்கு கடற்கரைச்சாலை, சாரம், உருளையன்பேட்டை, நடேசன் நகர், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி சதுக்கங்கள், வாணரப்பேட்டை, உப்பளம்,வைத்திகுப்பம் உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருள்களை பத்திரப்படுத்தினர். 173 நிவாரண மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழையால் புதுவையின் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, 45 அடி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, போன்றவற்றில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், போன்ற ஊர்களுக்கு செல்லும் சாலைகளிலும் மழைநீர் ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
புதுவையில் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 2 பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும் என துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டனர்.
இதன்படி 2 பேரிடர் மீட்புக் குழுக்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு வந்தன. அங்கிருந்து அவர்கள் இன்று புதுவைக்கு வந்தனர். 4 படகுகள் உட்பட நவீன கருவிகளுடன் வந்துள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் புதுச்சேரியில் தீவிர பாதிப்பு உள்ள இடங்களில் இன்று முதல் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications