நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி புதிய மாவட்டமாக அமையுமா..?
தென்காசி: நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரி்த்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டசபையில் தெரிவித்தார்.
சுற்றுலா தலமான குற்றாலம், தமிழக-கேரள எல்லை பகுதி, 4 நகராட்சிகளை கொண்ட சட்டமன்ற தொகுதி, 8 நகராட்சிகளை கொண்ட நாடாளுமன்ற தொகுதி ஆகிய சிறப்புகளை கொண்ட தென்காசியை நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிய தனிமாவட்டமாக அமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தென்காசி மாவட்டம் அமைய தீவிர முயற்சி எடுப்பேன் என கூறியிருந்தார். இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த கோரிக்கை அப்படியே கிடப்பில் போடப்பாட்ட நிலையில் உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவது குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசியஅமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டங்களில் தான் நாகப்பட்டினம், கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு புதிய மாவடங்கள் உருவாக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
தேவையான கால கட்டங்களில் வட்டம், கோட்டம், மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்த உதயகுமார், தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவரும் இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications