நிர்மலா தேவி விவகாரத்தில் நடந்தது என்ன?... விசாரணையைத் தொடங்கினார் அதிகாரி சந்தானம்!
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை உயர்அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சித்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் நியமித்த சந்தானம் ஒரு நபர் குழுவின் விசாரணை தொடங்கியுள்ளது.
Recommended Video
மதுரை: பேராசிரியை நிர்மலா விவகாரம் குறித்து ஆளநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் மதுரையில் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்ற போது தம்மை அணுகிய அதிகாரிகள் மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் படிப்பில் சலுகையும், பண உதவியும் செய்வதாகக் கூறியதாக பேராசிரியை நிர்மலா அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் தொலைபேசியில் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்தில் நடந்த இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திட்ம் புகார் அளித்தும் ஒரு மாதத்திற்கு பிறகு அவர் மீது தற்காலிக பணியிடை நீக்கம் மட்டுமே செய்தது.
இதனையடுத்து மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசிய தொலைபேசி ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பிரச்னை விஸ்வரூபமெடுத்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களோடு, ஆளுநர் பெயரும் இந்த ஆடியோவில் இடம்பெற்றதால் பிரச்னை பூதாகரமானது.
இதனையடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த விசாரணைக்குழுவை ரத்து செய்துவிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக்குழுவிற்கு உத்தரவிட்டார். இந்நிலையில் அதிகாரி சந்தானம் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணையை தொடங்கியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்றுள்ள அவர் முதற்கட்டமாக பதிவாளர் சின்னையாவிடம் விசாரணையை தொடங்கியுள்ளார். மாணவிகள் புகார் அளித்தும் காலதாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன், நிர்மலா தேவியுடன் தொடர்புடைய பேராசிரியர்கள் யார் யார் என்றும் சந்தானம் விசாரணை நடத்துகிறார்.
இன்று முதல் 3 நாட்களுக்கு சந்தானம் மதுரையில் தங்கி விசாரணை நடத்த உள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி பேராசிரியை நிர்மலா தேவி சிறையில் இருப்பதால் அவருக்கு கேள்விகள் அளித்து அதற்கு விளக்கம் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே நிர்மலாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.