கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழ் அகதிகள் முகாமில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ திடீர் ஆய்வு!
சென்னை: கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழ் அகதிகள் முகாமில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை நேற்று பார்வையிட்ட பின்னர் ஈழத் அகதிகளிடையே கிரண் ரிஜிஜூ பேசியதாவது:
இலங்கைத் தமிழ் அகதிகளை தமிழக மக்களைப் போலவே தமிழக அரசு பாதுகாத்து வருவது பாராட்டத்தக்கது. பாஸ்போர்ட், இலங்கைக் குடியுரிமை, இலங்கைக்கு திரும்ப அனுப்புதல், இந்தியக் குடியுரிமை தருதல் போன்றவை வெளியுறவுத் துறையைச் சேர்ந்தது.
இதேசமயம் மனித நேய அடிப்படையில் சந்தித்து குறைகளைக் கேட்க வந்துள்ளேன். முகாம் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ரூ.19 கோடி செலவில் 1,950 வீடுகள் தமிழகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. அகதிகள் முகாம் மக்கள் இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கலாம். அவர்களை இந்திய அரசு நன்கு பார்த்துக் கொள்ளும்.
முகாம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான வழியை தமிழக அரசோடு இணைந்து நலத் திட்டங்கள் தீட்டப்படும்.
இவ்வாறு கிரண் ரிஜுஜூ பேசினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கிரண் ரஜுஜூவிடம் ஈழத் தமிழ் அகதிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.