இழுபறிகளுக்கு இடையே ஆர்.கே.நகரில் நாளை திட்டமிட்டபடி வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
இழுபறி நிலவி வந்த ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது.
சென்னை: தேர்தல் நடைபெறுமா? என்ற இழுபறி நிலவி வந்த ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நாளை நடைபெறுவதையொட்டி ஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. மதுசூதனன், தி.மு.க. மருதுகணேஷ், பா.ஜ.க. கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம், சுயேச்சை தினகரன் உட்பட 59 பேர் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து வெளியூர்களில் இருந்து வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதேபோல் ஆர்.கே.நகர் தொகுதியில் மதுபான கடைகளும் இழுத்து மூடப்பட்டன.
ஆர்.கே.நகர் தொகுதியில் 2,28,234 பேர் வாக்காளர்கள். இத்தொகுதியில் 50 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆகையால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நாளை பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான சென்னை ராணி மேரி கல்லூரிக்கு எடுத்து செல்லப்படும். வரும் ஞாயிற்றுக்கிழமையன்று 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications