யாருக்கும் வெட்கமில்லை... வெள்ளமாக புரண்டோடும் பணத்துக்காக அலைபாயும் ஆர்கே நகர் வாக்காளர்கள்!
ஆர்கே நகரில் பணம் வெள்ளமென கரைபுரண்டோடுகிறது... கிடைக்கிறவரை ஆதாயம் எனும் மனநிலையில் வாக்காளர்களும் பணத்துக்காக அலைபாயும் வெட்கக் கேடான நிலையை பார்க்க முடிகிறது.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தல் திருவிழாதான்... ஆம் பணம் கொட்டோ கொட்டெனும் திருவிழாதான்... ஜனநாயக மாண்புகள் கிலோ என்ன விலை என கேட்கிற துணிகர மானங்கெட்ட திருவிழாவாகிப் போனதுதான் துயரம்.
ஆர்கே நகர் தொகுதியான 3 ஆண்டுகளில் 3 இடைத் தேர்தல்களை எதிர்கொண்டு விட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் பணம் வாரியிறைக்கப்பட தேர்தல் என்பது பண அறுவடைக்காலமாகிப் போய்விட்டது.

தலைகீழாக்கிய தினகரன்
அதுவும் அதிகாரத்தைக் கைப்பற்ற வெறிபிடித்தவராக தினகரன் வகையறாக்கள் களமிறங்க காரணமே பணத்தால் மக்களை வீழ்த்திவிடலாம் என்பதுதான்.. ஓட்டுக்குப் பணம் வாங்கமாட்டோம் என சில மாதங்களுக்கு முன்னர் புரட்சி குரல் ஒலித்த தமிழ் மண்ணில் தலைகீழ் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.

இப்படியெல்லாம் வருமானம்
ஆர்கே நகர் தொகுதியில் படித்த, படிக்காத பெண்கள், தினகரன் பூத்தில் சென்று 3 மணிநேரம் அமர்ந்தால் போதும்... இன்றைக்கு 300 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அந்த 3 மணி நேரத்துக்கு பின்னர் வேற கட்சி கொடி பிடித்துப் போனால் எக்ஸ்ட்ரா வருமானம் கிடைத்துவிடுகிறது.

எக்ஸ்ட்ரா வசூல்
இவைதவிர மளிகை பில் செட்டில்மெண்ட், ஆன்லைன் ஷாப்பிங் என எக்ஸ்ட்ரா வரவுகளால் மகிழ்ச்சியில் திளைத்துப் போகிறது வாக்காள பெருங்குடிகள் கூட்டம். ஓட்டுக்குப் பணம் வாங்காதே என விழிப்புணர்வு பிரசாரம் செய்யப் போனால், கையில் வைத்திருப்பவர்கள் கொடுக்கிறார்கள்... வாங்குகிறோம்.. உங்களுக்கு என்ன ஆச்சு என ஏகத்துக்கும் எகிறத்தான் செய்கிறது திருவாளர் பொதுஜனம்.

காசுக்காக கையேந்தும் மக்கள்
இதைவிட வெட்கக் கேடானது... பிரசாரம் செய்ய வரும் வேட்பாளர்களிடம், அவங்க எல்லாம் அவ்வளவு பணம் கொடுத்தாங்களே.. நீங்க ஒன்னும் தரலையே என மானம்கெட்டத்தனமாக கையேந்துகிற பெருங்கொடுமையையும் பார்க்க முடிகிறது. என்னதான் நீங்கள் கரடியாக கத்தினாலும் நாங்கள் விலங்கினும் கீழோர்தான் என்கிற நிலையில்தான் வாக்காளர்கள் உள்ளனரே என்பது சமூக ஆர்வலர்களின் பெருங்கவலை.











Click it and Unblock the Notifications