மக்களின் கோபத்தைத் தணிக்க மரண பள்ளங்களை மூடும் ஜெ. அரசு
சென்னை : தமிழகத்தில் சில நேரங்களில் அரசு இயந்திரங்கள் மின்னல் வேகத்தில் செயல்படும். குறிப்பாக அதிமுக பொதுக் குழுவுக்கு மின்னல் வேகத்தில் புது ரோடு போட்டது மாதிரி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதிசயங்கள் எப்போதாவதுதான் நிகழும். நேற்றும் இதுபோல ஒரு அதிசய சம்பவம் நிகழ்ந்தது.
கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈகா திரையரங்கம் அருகே, சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார், முன்னெச்சரிக்கையாக பள்ளத்தை சுற்றி தடுப்புகளை ஏற்படுத்தினர். பின், மெட்ரோ ரயில் ஊழியர்கள், பள்ளத்தை சிமென்ட் கலவை இட்டு சீரமைத்தனர். எல்லாமே சில மணி நேரங்களில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது.
சென்னையில் கொட்டிய கனமழையால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. வாகன ஓட்டிகள் தினம் தினம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்று வந்த நிலையில் சாலை நடுவிலும் திடீர் திடீர் என பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் மயிலாப்பூர் சிவசாமி சாலை நடுவே திடீர் பள்ளம் உருவானது. இதைத் தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பள்ளம் சரி செய்யப்பட்டது.

ராட்சச பள்ளங்கள்
டிசம்பர் மாதம் பெய்த மழையால் பல இடங்களில் சாலைகளில் ராட்சச பள்ளங்கள் உருவானது. அண்ணா சாலையில் எல்ஐசி அருகே 5 இடங்களில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதை பார்த்து வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளம் ஏற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

மத்திய கைலாஷ் பள்ளம்
சென்னை சர்தார் பட்டேல் சாலைக்கும், ராஜீவ் காந்தி சாலைக்கும் இடையில் உள்ள மத்தியக் கைலாஷ் குறுக்குச் சந்திப்புச் சாலையில், சாலை உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஆறு அடி ஆழத்துக்கு ஏற்பட்ட பள்ளத்தைக் கண்ட மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். சிலர் பள்ளத்தைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்தனர். போக்குவரத்து காவல் துறையினர், பள்ளம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றிலும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புப் பலகைகளை வைத்து, போக்குவரத்தைச் சரிசெய்தனர் எனினும் தொடர்ந்து பெய்த மழையால் அந்த பள்ளத்தை சரி செய்ய ஒருவார காலத்திற்கும் மேலானது.

25 நாட்களுக்கும் மேலாக மரண குழி
மைலாப்பூரில் நாட்டு சுப்பராயன் தெருவில் ஏற்பட்டுள்ள மரண பள்ளம் 25 நாட்களுக்கும் மேலாக சரி செய்யப்படாமல் உள்ளது இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு குடியிருப்பாளர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஈகா தியேட்டர் பள்ளம்
சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் திரையரங்கம் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலையில் 1.5 மீட்டர் ஆழத்துக்கு திங்கள்கிழமை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலின்பேரில் மெட்ரோ ரயில் அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர், சாலை பள்ளத்தை சரி செய்ய ஜேசிபி இயந்திரங்களுடன் ஊழியர்கள் வந்தனர். பிற்பகலில் பள்ளம் சரி செய்யப்பட்டு, போக்குவரத்தும் சீரானது.

மெட்ரோ ரயில் பணிகளால் பள்ளம்
கனமழையின் காரணமாக, மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில் மண் லேசாக தளர்ந்துள்ளது. இதனால் சுரங்கப் பணி நடைபெற்று முடிந்த பின், பள்ளங்கள் ஏற்படுகின்றன. எனினும், இவை உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. மேலும், மண் பலப்படுபடுத்தும் பணியும் நடக்கிறது என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடி நிவாரணம்
கீழ்பாக்கத்தில் ஏற்பட்ட பள்ளம் உடனடியாக சரி செய்யப்பட்டதன் காரணம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருவான்மியூரில் அதிமுக, பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது, குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு புதிதாக ஜொலித்தன. இது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை சரி செய்யும் வகையிலேயே நேற்று கீழ்பாக்கத்தில் ஏற்பட்ட ராட்சச பள்ளத்தை போர்க்கால அடிப்படையில் சரி செய்து சிமெண்ட் கலவை பூசினர்.












Click it and Unblock the Notifications