சென்னை சாந்தோமில் வங்கியில் கொள்ளை முயற்சி
சென்னை: சென்னை சாந்தோமில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இன்று அதிகாலையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
முகமூடி மற்றும் கையுறை அணிந்த அடையாளம் தெரியாத நபர் வங்கியின் பின்பக்கம் வழியாக உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.
ஜன்னல் கம்பிகளை அறுத்த அவர், பெட்டக அறையின் சுவரையும் இடிக்க தொடங்கியுள்ளார். அந்த சத்தம் கேட்டு, வங்கியின் மேற்பகுதியில் குடியியிருந்த மூதாட்டி, தனது உறவினர் ராமருக்கு தகவல் அளித்துள்ளார். அவர், வங்கியின் மேலாளர் தியாகராஜனுக்கு தொலைப்பேசி மூலம் தெரிவித்துள்ளார்.
நங்கநல்லூரிலிருந்து வங்கி மேலாளர் வருவதற்குள் கொள்ளையன் தப்பியோடிவிட்டான்.
வங்கியிலிருந்த 8 கண்காணிப்பு கேமிராக்களிலும், தனது அடையாளங்கள் தெரியாத வகையில், கொள்ளையன் திசை மாற்றியுள்ளான். அதனால், கேமிராவில் கொள்ளையனின் உருவம் முழுமையாக பதிவாகவில்லை.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகள், கொள்ளையன் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்து வருகின்றனர்.