குமரி மாவட்டத்தில் கார் கண்ணாடியை உடைத்து சுற்றுலா பயணிகளின் செல்போன்கள் திருட்டு
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 செல்போன்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சார்ந்த ஹரிபாபு என்பவர் அவரது குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இன்று காலை கன்னியாகுமரி காவல் நிலையம் எதிர்புறம் காரை நிறுத்திவிட்டு சூரிய உதயம் காண்பதற்காக சென்றார்கள்.

திரும்பி வந்து பார்த்த போது அவர்களது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 20 ஆயிரம் மற்றும் நான்கு மொபைல் போன்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதே போல் கோவையை சார்ந்த சுற்றுலா பயணிகள் வந்த கார் ஒன்று காவல் நிலையம் மிக அருகே உள்ள ரவுன்டானா அருகே நிறுத்திவிட்டு சூரிய உதயம் காண சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அவர்களது கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களும் காவல் நிலையம் அருகே 100 அடி தூரம் கூட இல்லாத நிலையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை குறிவைத்து தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications