ரயில் சரக்கு கட்டணம் உயர்வு: முதல்வர் ஜெயலலிதா கண்டனம்
சென்னை: ரயில்வே சரக்கு கட்டண உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலையேற்றம் காரணமாக விலைவாசி விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், ரயில்வே சரக்குக் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

சீசன் அடிப்படையில் கட்டண உயர்வு
கடந்த சில ஆண்டுகளாகவே வலுவான விலைக் கொள்கை என்ற பெயரில், அக்டோபர் முதல் ஜூன் வரையிலான 9 மாதங்களை சுறுசுறுப்பான பருவம், அதாவது பிசி சீசன் என்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களை சுறுசுறுப்பற்ற பருவம், அதாவது, லீன் சீசன் என்றும் வகைப்படுத்தி; 9 மாதங்களுக்கு அதிகப்படியான சரக்குக் கட்டணத்தை மத்திய அரசு விதித்து வருகிறது.

எவ்வளவு உயர்வு?
1.4.2011 முதல் 30.6.2011 வரையிலான காலத்தில் நிலக்கரிக்கான சரக்கு கட்டணம் 5 விழுக்காடாகவும்; இதர பொருட்களுக்கான சரக்கு கட்டணம் 7 விழுக்காடாகவும்; 1.10.2011 முதல் 30.6.2012 வரையிலான காலத்தில் அனைத்துப் பொருட்களுக்குமான சரக்கு கட்டணத்தை 10 விழுக்காடாகவும்; 1.10.2012 முதல் 30.6.2013 வரையிலான காலத்தில் உணவு தானியத்திற்கான சரக்குக் கட்டணத்தை 10 விழுக்காடாகவும்; ரசாயன உரங்களுக்கான சரக்குக் கட்டணத்தை 10 விழுக்காடாகவும்; இதர பொருட்களுக்கான சரக்குக் கட்டணத்தை 12 விழுக்காடாகவும் சுறுசுறுப்பு காலத்திற்கென உயர்த்தி நிர்ணயித்தது.

மீண்டும் உயர்வு
தற்போது, 1.10.2013 முதல் சுறுசுறுப்பு பருவத்திற்கான சரக்குக் கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் 15 விழுக்காடு என நிர்ணயித்துள்ளது. இதன்படி, 1.10.2013 முதல் அனைத்து பொருட்கள் மீதான சரக்குக் கட்டணமும் 15 விழுக்காடு உயரும். மத்திய அரசின் இந்தச் செயல் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும்.

நியாயமற்ற செயல்
ரயில் சரக்கு போக்குவரத்தைப் பொறுத்தவரை, எல்லா மாதமுமே ஒரே மாதிரியாக இருக்கின்ற போது, அக்டோபர் முதல் ஜூன் வரையிலான காலத்தை சுறுசுறுப்பான பருவம் என்று செயற்கையாக வகைப்படுத்தி, அந்தக் காலத்திற்கு சுறுசுறுப்பான பருவக் கட்டணம் வசூல் செய்வது நியாயமற்ற செயல்.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு
இந்த சரக்குக் கட்டண உயர்வு காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும், தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் முக்கிய மூலப் பொருட்களான சிமெண்ட், நிலக்கரி, இரும்பு போன்றவற்றின் விலையும் உயரும். இதன் காரணமாக கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து, வீடு கட்டிக் கொண்டிருக்கும் ஏழை, எளியோரின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும்.

பணவீக்க விகிதம் அதிகரிக்கும்
மேலும், ஏற்கெனவே உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், அனைத்துப் பொருட்களுக்கான சரக்குக் கட்டண உயர்வு ஒட்டு மொத்த விலை உயர்வுக்கும், பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கவும் வழி வகுக்கும்.

பயன் தராது
மத்திய அரசின் இந்த சரக்குக் கட்டண உயர்வு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தையும், நாட்டு மக்களையும் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குமே அன்றி, எதையும் நிலைநிறுத்த பயன் தராது.

உடனே திரும்பப் பெறுக
பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதையும், இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய பரிதாபகரமான நிலையையும் கருத்தில் கொண்டு, பணவீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தும் வண்ணம், தற்போது உயர்த்தப்பட்டுள்ள சரக்குக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications