தலைமை செயலகத்தில் ஓடுகள் பெயர்ந்து விழுந்து ஊழியர் காயம்... தலைவர்கள் ‘தலை’ தப்பியது!
சென்னை: தலைமைச் செயலகத்தின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் திடீரென சரிந்து விழுந்ததில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இன்றைய சட்டசபைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தலைமை செயலகத்தின் 4-ம் எண் நுழைவு வாயில் அருகே உள்ள ஏ.சி. பிளான்ட் அருகே தலைமை செயலக ஊழியர் முகமது அலி என்பவர் பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்தார்.
அப்போது பகல் 1 மணியளவில், திடீரென ஏசி பிளாண்டிற்கு மேல் பகுதியில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தின் ஜன்னல் ஓடுகள் பெயர்ந்து முகமது அலியின் தலையில் விழுந்தது. இதில் முகமது அலியின் தலையில் பலத்த காயம் உண்டானது.
காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தலைமை செயலகத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் தான், சட்டசபையிலிருந்து வெளியே வந்த தி.மு.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.