பார்ட்டிக்கு கூட்டி வந்து கூட்டாக கூறு போட ப்ளான் போட்ட பினு.. எஸ்கேப்பான ரவுடி ராதா
பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்து ரவுடி ராதாகிருஷ்ணன் மற்றும் ஒரு ரவுடியை போட்டுத்தள்ள பினு திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
Recommended Video
சென்னை: பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்து ரவுடி ராதாகிருஷ்ணன் மற்றும் ஒரு ரவுடியை போட்டுத்தள்ள பினு திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
சென்னை மலையம்பாக்கத்தில் பிறந்த நாள் விழாவுக்காக 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்றாக திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மாற்று வாகனத்திலும் மாற்று உடையிலும் சென்று ரவுடிகளை சுற்றி வளைத்தனர்.
பயங்கர ஆயுதங்களுடன் இருந்த ரவுடிகளை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
பத்திரிக்கையாளர் அட்டை
இவர்களில் மாணவர்களும், வழக்கறிஞர்களும் அடக்கம். மேலும் சில ரவுடிகள் பத்திரிக்கையாளர் அடையாள அட்டையுடன் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனிப்படைகள் அமைப்பு
போலீசாரின் இந்த மலையம்பாக்கம் ஆபரேஷனில் மூன்று ரவுடிகள் தப்பியோடிவிட்டனர். தப்பியோடிய பினு, கனகு, விக்கி ஆகியோரை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திடுக்கிடும் தகவல்கள்
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தப்பி ஓடிய பினு அவனது கூட்டாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆட்கடத்தலில் தேர்ந்தவர்
பினு ஆட்களை கடத்தி பணம் பறிப்பதில் கை தேர்ந்தவர் என்றும் அவர் மீது கொலை வழக்குகளும் உள்ளது. சூளைமேட்டில் வசித்து வந்த பினு கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இடையில் வந்த புது ரவுடி
இதனால் தனது தொழிலை சில காலம் நிறுத்தி வைத்து இருந்தார். இந்த காலக்கட்டத்தில் தான் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் சூளைமேடு பகுதிகளில் புகுந்து கட்ட பஞ்சாயத்து ஆட் கடத்தல், கொலை உள்ளிட்டவைகளை செய்து வந்துள்ளார்.
குறைந்த பினுவின் மவுசு
இதனால் தொழிலில் அவரது ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அவருடன் சேர்ந்து மற்றொரு ரவுடியும் வளர்ச்சி அடைந்து வந்துள்ளார். இதனால் பினு மவுசு குறைந்து விட்டது. எனவே மீண்டும் தனது தொழிலில் இறங்கி தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
போட்டுத்தள்ள முடிவு
அதற்கு இடையூறாக இருக்கும் ராதாகிருஷ்ணன் மற்றும் மற்றொரு ரவுடியை இந்த பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து அங்கு வந்ததும் இரண்டு பேரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார் பினு. இந்த தகவல் அறிந்ததும் இருவரும் அங்கு செல்லாமல் தப்பி விட்டதகாவும் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
முகத்தை சிதைத்து..
மேலும் பினுவின் கொலை செய்யும் சம்பவம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் கொலை செய்யும் நபரின் தலையில் வெட்டி முகத்தை சிதைத்து பின் அந்த முகத்தை எரித்து விடுவார். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை பினு தனது ஆதரவாளர்களுடன் பல்வேறு இடங்களில் கொண்டாடி உள்ளார்.
அசம்பாவிதம் தவிர்ப்பு
தற்போது பிறந்தநாள் விழா கொண்டாடி முடித்தவுடன் மோட்டார்சைக்கிள்கள், கார்களில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஊர்வலமாக செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் போலீசார் உரிய நேரத்தில் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஷெட் உரிமையாளருக்கு வலை
மேலும் அத்துமீறி அமைக்கப்பட்டு இருந்த அந்த லாரி ஷெட் ஜெ.சி.பி. எந்திரம் கொண்டு இடித்து தள்ளப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள அந்த லாரி செட்டின் உரிமையாளர் வேலுவை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.