சங்கரன்கோவிலில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை: பதட்டம்
நெல்லை: தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி சங்கரன்கோவிலில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பி.எஸ். நகரில் வசித்து வந்தவர் கண்ணன். தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி என கூறப்படுகிறது. அவர் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே கீர்த்தனா பாலிமர் என்ற பெயரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் நடத்தி வந்தார்.

நேற்று மாலை 5 மணி அளவில் கண்ணன் தனது நிறுவனத்தில் வழக்கம்போல் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 15 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரது கடைக்குள் நுழைந்தது. இதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தடுக்க முயன்ற காவலாளிகளை அந்த கும்பல் மிரட்டியது.
பின்னர் உள்ளே நுழைந்த கும்பல் கண்ணனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பொறுப்பு டிஎஸ்பி ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றினர்.
உடலை சங்கரன்கோவிலிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறி்தது சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான கண்ணன் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. இதனால் அங்கு பதட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications