திருப்பத்தூர் அருகே பிரபல ரவுடியின் தலையை அரிவாளால் துண்டித்த மனைவி
சிவகங்கை: திருப்பத்தூர் அருகே பிரபல ரவுடியின் தலையை அவரது மனைவி அரிவாளால் வெட்டி துண்டாக்கியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கல்வெட்டுமேட்டைச் சேர்ந்தவர் சோனைமுத்து மகன் பாரிமன்னன்(32). கூலித் தொழிலாளி. அவரது மனைவி மாரிமுத்து பாரிமன்னனின் கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து பாரிமன்னன் தென்மாபட்டு பகுதியைச் சேர்ந்த பில்லப்பன் என்பவரின் மகள் பிரவீனாவை(21) மணந்தார்.
பாரிமன்னன் தினமும் குடித்துவிட்டு மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அவர் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் அடிதடி, திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்மாபட்டுக்கு சென்று பிரவீனாவை அவர் அடித்துள்ளார்.
பாரிமன்னனின் கொடுமையை தாங்க முடியாத பிரவீனா அரிவாளை எடுத்து கணவனை சரமாரியாக வெட்டினார். இதில் பாரிமன்னனின் தலை துண்டானது. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.