ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை, ரூ. 1000 அபராதம்: ரயில்வே எச்சரிக்கை
சென்னை: ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப் படுமென சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளை தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப் படுவதையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் கூட்டம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் நிரம்பி வழிகிறது. ஊருக்குச் செல்வோர் சென்னையில் இருந்து பட்டாசு மற்றும் துணிமணிகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
ஆனால், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பட்டாசு உள்ளிட்டவற்றை ரயிலில் கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரயிலில் பட்டாசு கொண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமி கூறியதாவது :-
ஆபத்திற்கு வாய்ப்பு...
பட்டாசுகள் எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை என்பதால் ரயிலில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சிலர் தடையை மீறி பட்டாசுகளைக் கொண்டு செல்கின்றனர். இது, சில நேரங்களில் விபத்தை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது.
கூடுதல் கண்காணிப்பு...
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகள், வெடிபொருள்கள் ரயில்களில் கொண்டு செல்வதைத் தடுக்க கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு ரயில்வே கோட்டத்திலும் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
சோதனை...
இந்த தனிப்படையினர், அந்தந்தக் கோட்டத்திற்குள் வந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். ரயில்களில் பயணிகள் கொண்டு வரும் அனைத்துப் பொருள்களையும் சோதனை செய்கின்றனர்.
சிறை தண்டனை...
ரயில்களில் பட்டாசு, வெடிபொருள்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி கொண்டு செல்வோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.