தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு கடத்தவிருந்த ரூ.2 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு நூதன முறையில் கடந்தப்படவிருந்த செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து துபாய் துறைமுகமான ஜபல்அலிக்கு ரெடிமேட் துணிகள் ஏற்றுமதி செய்ய ஒரு கண்டெய்னர் தயாராக இருந்தது. அதனை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து ரூ.2 லட்சம் மதிப்பிலான ரெடிமேட் ஆடைகள் இருப்பதை உறுதி செய்து சீல் வைத்து துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஜபல்அலிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த கண்டெய்னருக்குள் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்லப்படுவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கண்டெய்னரை அதிகாரிகள் திரும்ப வரவழைத்தனர். இரவு துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னரை சுங்கத் துறை புலனாய்வு துறையினர் சோதனையிட்டபோது அதற்குள் 7 மெட்ரிக் டன் அளவிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தியதில் ரெடிமேட் ஆடைகள் என்ற பெயரில் சுங்கத் துறையில் சீல் பெற்று துறைமுகம் செல்லும் வழியில் கண்டெய்னரின் கதவுகளை சட்டவிரோதமாக திறந்து அவற்றின் உள்ளே இருந்த ரெடிமேட் ஆடைகளை அகற்றிவிட்டு செம்மரக்கட்டைகளை அடுக்கி பின்னர் கண்டெய்னர் சீல் உடையாத வண்ணம் கதவுகளை பூட்டி கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கடத்தலில் ஈடுபட்ட சிலரை சுங்கத் துறையினர் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications