ஜிங்குச்சா ஜிங்குச்சா.. நீல கலரு, மஞ்ச கலரு.. வண்ண வண்ண ரூ.50, ரூ.200 நோட்டுகள்.. தமிழகத்திலும்!
தமிழகத்தில் புதிய ரூ.200, ரூ.50 நோட்டுகளின் விநியோகம் தொடங்கியுள்ளது.
சென்னை : புதிதாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ரூ.200, ரூ.50 நோட்டுகள் தமிழகத்தில் இன்று முதல் புழக்கத்திற்கு வந்துள்ளன.
எனினும் ஏடிஎம்களில் கிடைக்க மேலும் சில வாரங்களாகும் என்று தெரிகிறது. புதிய ரூ.200, ரூ.50 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது.
இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் கடந்த வெள்ளிக்கிழமையே புழக்கத்துக்கு வந்துவிட்டது. சென்னை ரிசர்வ் வங்கிக்கு இந்த புதிய ரூபாய் நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு விட்டன.
லீவு காரணமாக லேட்
வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறை மற்றும் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக புதிய ரூ.200 நோட்டுகள் வங்கிகளுக்கு பிரித்து கொடுக்கப்படவில்லை.
முதல் கட்டமாக
இந்த நிலையில் இந்த புதிய ரூ.200 நோட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் முதற்கட்டமாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழக வங்கிகளில் இன்று முதல் ரூ.200 புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
வங்கிக் கிளைகளில் மட்டும்
வங்கி கிளைகளில் பணம் எடுக்க செல்லும்போது மட்டுமே இந்த புதிய ரூ.200 நோட்டுகள் வழங்கப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து மட்டுமே பெற முடியும். சென்னையிலுள்ள ரிசவர்வ் வங்கி அலுவலகத்தில் பொதுமக்கள் சில்லறை பெரும் கவுண்டர்களில் இருந்து ரூ.200 நோட்டுகளை வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்கின்றனர்.
|
நீல கலரு.. மஞ்சள் கலரு
நீல நிறத்தில் ரூ.50 நோட்டும் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் ரூ.200 நோட்டும் இரண்டு நிறங்களில் இந்த நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.