கல்வியின் தரம் உயர்த்த நடவடிக்கை... கல்விக்கு ரூ.26,932 கோடி நிதி- செங்கோட்டையன்
கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்று கல்வியமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்றும் கல்வியின் தரத்தை உயர்த்த அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நடப்பாண்டில் கல்வித்துறைக்கு ரூ.26,913 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

நடப்பு கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் இது தொடர்பாக முடிவு எடுத்து அரசாணை வெளியிடப்படும். இதற்காக பிளஸ்1 பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
நீட் நுழைவுத் தேர்வுகளை சந்திக்கும் வகையில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. புதிய பாடத் திட்டம் உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. புதிய பாடத் திட்டத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன. ஆசிரியர்களுக்கும் புதிய பாடத்திட்டம் தொடர்பான பயிற்சி அளிப்பது குறித்து அரசாணை வெளியிடப்படும்.
தமிழ்நாட்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் மொத்தம் 250 பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது.
கல்வியின் தரத்தை உயர்த்தவும், கல்விக்கூடங்களின் தரத்தை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும். ரேங்க் முறை ஒழிக்கப்பட்டு கிரேடு முறையில் ரிசல்ட் அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட் அறிவிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.












Click it and Unblock the Notifications