ரூ. 3 ஆஆஆஆயிரம் ரொக்கம்: தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் ரொக்கமாக அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த நாளில் இருந்து மக்கள் செலவுக்கு கையில் பணம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஏடிஎம்களுக்கு சென்றால் பலவற்றில் பணம் இல்லை.
வங்கிகளுக்கு சென்றால் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. மருந்து வாங்கக் கூட பணம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ரொக்கத்தை பார்ப்பதே தற்போது பெரிய விஷயமாக உள்ளது.
இந்நிலையில் தான் தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நவம்பர் மாத சம்பளத்தில் ரூ.3 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி நேற்று போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. மீதமுள்ள சம்பளம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
பணம் இல்லாமல் கவலையில் இருந்த எங்களுக்கு இந்த ரூ.3 ஆயிரம் பெரும்தொகையாகும். ரொக்கம் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சியாக உள்ளது என போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.