ரூ.570 கோடி கண்டெய்னர் விவகாரம் - சிபிஐ விசாரணை உத்தரவு - வைகோ, திருமா வரவேற்பு
சென்னை: திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்ற தருணத்தில், திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின்னர், இந்த பணத்திற்கு ஸ்டேட் வங்கி உரிமை கோரியது. தொடர்ந்து, உரிமை கோரிய ஹைதராபாத்தில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு, அந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டது.

பல மர்மங்கள் நிறைந்துள்ள இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, திமுக சார்பில் சென்னை உயர் நீதீமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். அப்போது, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தேவை எழவில்லை என்று சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பண பரிவர்த்தனையில் சர்வதேச தொடர்பு எதுவும் இல்லை. சிபிஐ வசம் குறைவான அதிகாரிகளே உள்ளனர். மேலும், சிபிஐ விசாரிக்கும் அளவிற்கு இந்த வழக்கு ஒன்றும் பெரிய குற்றம் தொடர்பானதோ அல்லது மத்திய அரசு ஊழியர்கள் மீதானதோ இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 29ந்தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானது.
ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரத்தில் மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புகார் குறித்த ஆவணங்கள் ஏதேனும் கிடைத்தால் அவற்றை பதிவு செய்து சி.பி.ஐ. சட்டப்படி விசாரணை நடத்துமாறும், விசாரணையை விரைந்து முடிக்குமாறும் நீதிபதி சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.
வைகோ - திருமாவளவன் வரவேற்பு
கண்டெய்னரில் ரூ. 570 கோடி பணம் கைப்பற்றப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ளார். அதேபோல, சிபிஐ விசாரணைக்கு வங்கி அதிகாரிகளும், தமிழக அரசும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், 570 கோடி ரூபாய் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றத்தின் இந்த ஆணை நம்பிக்கை தருவதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications