எங்களுக்குத்தான் விடுப்பே இல்லையே.. போலீசார் மத்தியில் பரவும் வாட்ஸ் அப் தகவல்!
சென்னை: தமிழக போலீசார் குறித்தும் அவர்களது விடுப்பு குறித்தும் ஒரு தகவல் போலீசார் மத்தியில் பரவி வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டுள்ள காவலர்களின் விடுப்புகளை உடனடியாக ரத்து செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக போலீசார் குறித்தும் அவர்களது விடுப்பு குறித்தும் ஒரு தகவல் போலீசார் மத்தியில் பரவி வருகிறது.
அந்த தகவல்:
ஜனவரி மாதம் பொங்கல் பாதுகாப்பு பணி இருக்கு யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
பிப்ரவரி மாதம் வருடாந்திர கவாத்து பயிற்சி இருக்கு யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
மார்ச் மாதம் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
ஏப்ரல் மே மாதம் தேர்தல் நடைபெறுவதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
ஜுன் மாதம் கோடை விடுமுறைக்கு பின்பு நீதிமன்றம் நடைபெறுவதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
ஜுலை மீண்டும் சட்ட சபை கூட்டத் தொடர் நடைபெறுவதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணி இருப்பதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
செப்டம்பர் மாதம் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்பு பணி இருப்பதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
அக்டோபர் மாதம் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணி இருப்பதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிப்பு தின பாதுகாப்பு பணி இருப்பதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
கொடுப்பது 12 நாள் தற்செயல் விடுப்பு அதையும் 12 மாதத்திலும் விடுப்பு கேட்க கூடாது என்ற இந்த மட்டற்ற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு ஒரு தகவல் போலீசார் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.