என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது, இல்லை என்றால்.. எச்சரிக்கிறாரா எஸ்.வி.சேகர்?
சென்னை: என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும், என்று ஆதங்கப்படுகிறார் எஸ்.வி.சேகர்.
பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான அவரை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக பாஜகவில் இருந்து முறைப்படி அழைக்கவில்லை என்ற கோபம்தான் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இப்படி கொப்பளித்துள்ளது.
தனது 6001வது நாடக அரங்கேற்ற விழாவுக்கு ஜெயலலிதாவை தலைமை தாங்க அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் எஸ்.வி.சேகர், ஒருபக்கம் தமிழக பாஜகவினர் மீது சாடுகிறார்.

மோடியின் செல்லப்பிள்ளை
எஸ்.வி.சேகர் மீண்டும் அதிமுக கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அவரது இந்த பதில்களுக்கு, அவரே விளக்கமும் அளித்துள்ளார். எஸ்.வி.சேகர் கூறியுள்ளது இதுதான்: நான் பாஜக கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கிறேன். திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தில் பல பேர் லாபி செய்தபோதும் என்னை அழைத்து அந்தப் பதவியைக் கொடுத்தவர் பிரதமர் மோடி. அவரின் நன்மதிப்பை பெற்ற நான் கட்சி மாறமாட்டேன்.

அலட்சியம்
தமிழகத்தில், தேர்தல் பிரசாரத்துக்காக என்னைக் கட்சியில் இருந்து முறையாக ஒருவரும் அழைக்கவில்லை. தேர்தலுக்கு முன் திடீரென தலைமையகத்தில் இருந்து ஒரு அழைப்பு. யார் என்றே சொல்லிக் கொள்ளாமல், முக்கியத் தலைவர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் வருகிறார், நீங்கள் அப்படியே வந்துவிடுங்கள் என்று கூறினார்கள்.

பயன்படுத்தினால் கட்சிக்கு நல்லது
அதற்கான விழா நோட்டீஸிலும் என் பெயர் போடவில்லை. இதுதான் பிரபல பேச்சாளரை அழைக்கும் முறையா? முறைப்படியான அழைப்பு இல்லாமல், நானே வண்டியை எடுத்துக்கொண்டு சுற்றிவர முடியாது. என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும்.

ஜெயலலிதாவுக்கு பாராட்டு
ஒரு பெண்மணியாக இருந்து இவ்வளவு பெரிய கட்சியைக் கட்டிக்காத்து மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருப்பது ஜெயலலிதாவின் சாதனை. இந்த முறை அவரிடம் பல மாற்றங்களைக் கண்டு ஆச்சர்யப்படுகிறேன். பதவியேற்பு விழாவுக்கு கட் அவுட்களைக் காணவில்லை. போக்குவரத்து பெரிய அளவில் முடங்கவில்லை. டாஸ்மாக் நேரக்குறைப்பு, 500 கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு என நல்ல ஆரம்பமாகத் தெரிகிறது.

பயன்படுத்தவில்லை
பாஜக கட்சிக்குள் எனக்கு எந்தக் கருத்துவேறுபாடுகளும் கிடையாது. வருத்தம்தான். பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் இத்தனை தடவை தமிழகத்துக்குப் படையெடுத்தும், அதை எல்லாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற வருத்தம் மட்டுமே கட்சி மீது இருக்கிறது. இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications