லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தும் சகாயம் ஐ.ஏ.எஸ்!... நேர்மையின் மறுபக்கம்!!
சென்னை: "உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து" "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து" இவை சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கொள்கைகள்.
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தியதாலேயே அரசுப் பணியில் பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டார் சகாயம்.
கடந்த வாரம் வரை கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்த, ஐ.ஏ.எஸ்., சகாயம், 48 மணி நேரத்திற்குள், இரண்டு இடங்களுக்கு, இடமாற்றம் செய்யப்பட்டார்.
கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்த சகாயத்திற்கும், கைத்தறித் துறை அமைச்சர் கோகுல இந்திராவிற்கும் இடையே, உரசல் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக, கடந்த, 3ஆம் தேதி, கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனராக மாற்றப்பட்டார் என்று கூறப்பட்டது. அங்கு சென்று, பதவியேற்பதற்கு முன், நேற்று முன்தினம், அவரை, அறிவியல் நகரம் துணைத் தலைவராக நியமிப்பதாக, தலைமைச் செயலர் அறிவித்துள்ளார். இதற்கு முன் சகாயம் ஆற்றிய பணிகளையும், அங்கு அவர் செய்த சாதனைகளையும் மேற்கொண்டு படியுங்கள்.

கொள்கை நாயகன் சகாயம் ஐ.ஏ.எஸ்
ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும், அந்த கொள்கை எத்தகையது என்பதே, அவர் எத்தகையவர் என்பதைத் தீர்மானிக்கும். சகாயத்தின் கொள்கைகள் ஆரம்பம் முதல் இன்றுவரை அவரது நேர்மையை பறைசாற்றுகிறது.

பணியில் நேர்மை
தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி, திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர், கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்
சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி, தொழில் வணிகத்துறை இணை இயக்குனர் ,மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர் என பல பதவிகளை வகித்தார்.

சொத்துக்கணக்கு
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற உடன் தனது சொத்துக்கணக்கை வெளியிட்டார். ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தனது சொத்துக்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும், நான் அதையும் தாண்டி எனது சொத்து விபரத்தை மக்களுக்கும் சேத்து தெரியப்படுத்தியுள்ளேன் என்றார்.

மக்கள் போராட்டம்
திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டார் சகாயம் அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று நாமக்கல் மாவட்ட மக்கள் போராட்டமே நடத்தினர். பின்னர் புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக பதவி வகித்த அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி பொறுப்பேற்றார்.

சிம்ம சொப்பனம்
2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வினருக்கு,குறிப்பாக மத்திய அமைச்சரும்,தென் மண்டல் தி.மு.க. அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரி ஆட்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சகாயம்,தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை பெருமளவில் முறியடித்தார்.

கிரானைட் கொள்ளை
இந்நிலையில்,தேர்தல் முடிந்து அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும் அதே பதவியில் நீடித்துவந்தார் சகாயம். அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும், சகாயம் மட்டும் மாற்றப்படாமல் மதுரை ஆட்சியராக நீடித்துவந்தார்.

அழகிரிக்கு சம்மன்
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கல்லூரிக்கு அரசு நிலம் ஆக்கிரமிப்பு கட்டப்பட்டது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி திமுகவினரை அதிர வைத்தார். மதுரை ஆதீன விவகாரத்தில் நித்தியானந்தா மீது அளிக்கபட்ட புகாரில் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதோடு மட்டுமின்றி அதற்கான வேலைகளிலும் அவர் ஈடுபட்டார்.

கிரானைட் கொள்ளை
மதுரை மாவட்டத்தில் கிரானைட் நிறுவனங்களின் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து அந்த நிறுவனங்களில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் திடீரென கோ.ஆப்.டெக்ஸ் நிறுவனத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார் சகாயம். எனினும் கிரானைட் குவாரிகளால் அரசுக்கு 16,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக அவர் அளித்த அறிக்கை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கோ – ஆப்டெக்ஸ்
கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக, கடந்த 2012 ஜூன் மாதம், சகாயம் பொறுப்பேற்றார். அதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தை மேம்படுத்த, சகாயம், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.

ரூ. 14 கோடி லாபம்
இவரது அதிரடி நடவடிக்கைகளின் பயனாக, 2012 - 13ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.கோ - ஆப்டெக்ஸ் விற்பனை, 200 கோடியில் இருந்து, 300 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 14 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.

லாபத்தில் பங்கு
லாபத்தில் இருந்து ஒரு கோடியை, நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கினார். நெசவாளர்கள் புகைப்படத்தை, அவர்கள் நெய்த துணியில் இணைக்க நடவடிக்கை எடுத்தார்.

தாவணி, வேட்டி தினங்கள்
தமிழர்களின் பாரம்பரிய உடையை அனைவரும் அணியவேண்டும் என்ற நோக்கிலும், இளம் பெண்களுக்கு தாவணிதினம், ஆண்களுக்கு வேட்டி தினங்களை கொண்டாடி அவற்றின் விற்பனையை அதிகரித்தார்.

அழகான விற்பனை நிலையங்கள்
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்குள் செல்லவே பொதுமக்கள் யோசித்த காலம் இருந்தது. இதனை மாற்றும் வகையில் விற்பனை நிலையங்களை அழகுபடுத்தியதோடு ஏராளமான மக்கள் கோ-ஆப்டெக்ஸ் கடைகளுக்குள் வரவழைத்தார்.

அரசியல் நெருக்கடி
இந்தநிலையில் பல்வேறு அரசியல் நெருக்கடிகளால் மீண்டும் பந்தாடப்பட்டார் சகாயம் ஐ.ஏ.எஸ். மாவட்ட ஆட்சியர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள், ஆனால், ஒரு சிலரே மக்கள் மனதில் ஆழமாக, நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அப்படி, மக்கள் மனதில் ஒரு பெரும் மதிப்பைப் பெற்றவர், சகாயம் ஐ.ஏ.எஸ். அவரின் நேர்மையை அறிந்து, சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் கிரானைட், தாது மணல் கொள்ளை குறித்து ஆய்வு நடத்த குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதோ தனது நேர்மையான பயணத்தை மீண்டும் தொடங்கிவிட்டார் சகாயம் ஐ.ஏ.எஸ்.












Click it and Unblock the Notifications