பிஆர்பி கிரானைட்: நரபலி தந்ததாகக் கூறப்பட்ட இடத்தில் மொத்தம் 8 எலும்புக் கூடுகள் மீட்பு
மதுரை: மதுரையில், கிரானைட் குவாரி நரபலி கொடுத்ததாகக் கூறப்பட்ட இடத்தில் தோண்டும் பணி நிறைவு பெற்றது. இதுவரை அங்கு 8 எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஹைகோர்ட் உத்தரவின் பேரில் சட்ட ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வருகிறார். அடுத்த மாதம் இது தொடர்பான அறிக்கையை அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறார்.
இதற்கிடையே, கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயத்திடம் பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்திருந்தனர். அப்போது பிஆர்பி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த சேவற்கொடியான் என்பவர், அந்த கிரானைட் நிறுவனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நரபலி கொடுத்ததாக சகாயத்திடம் புகார் மனு அளித்தார்.

தோண்டும் பணி...
அந்த மனுவின் அடிப்படையில் சேவற்கொடியான் அடையாளம் காட்டிய, மேலூரை அடுத்த கீழவளவு சின்னமலம்பட்டி மணிமுத்தாறு இடுகாட்டில் தோண்டும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

போலீசில் புகார்...
கடந்த வாரம் அந்த இடத்தில் இருந்து ஒரு குழந்தை, 2 பெண்கள், ஒரு ஆண் என 4 பேரின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி அழகுராஜன் கீழவளவு போலீசில் புகார் தெரிவித்தார்.

வழக்குப் பதிவு...
அந்தப் புகாரின் அடிப்படையில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர். பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, ஜேசிபி டிரைவர் பரமசிவம் ஆகிய 4 பேர் மீது தடயங்கள் அழித்தல், சந்தேக மரணம் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையொட்டி அவர்கள் கீழவளவு போலீசில் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சகாயம் கடிதம்...
அதனைத் தொடர்ந்து, சேவற்கொடியான் அடையாளம் காட்டி ஏற்கனவே தோண்டப்பட்ட இடத்தில் மேலும் 10 அடி தோண்டி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடிதம் அனுப்பினார்.

தோண்டத்தோண்ட எலும்புகள்...
இதன்பேரில், மீண்டும் கடந்த 18ம் தேதி அங்கு தோண்டும் பணி தொடங்கியது. அப்போது அங்கிருந்து மேலும் இரண்டு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. நேற்று 3வது நாளாக நடந்த தோண்டும் பணியின்போது மேலும் ஒரு எலும்புக் கூடு கிடைத்தது.

தோண்டும் பணி நிறைவு...
இன்று 4- வது நாளாக நடைபெற்ற தோண்டும் பணியில் மேலும் ஒரு எலும்புக்கூடு கிடைத்தது. இதனால், மொத்தம் இதுவரை 8 பேரின் எலும்புக்கூடுகள் அங்கு கிடைத்துள்ளது. தற்போது தோண்டும் பணி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணை...
கிடைக்கப்பட்டுள்ள எலும்புக் கூடுகள் யாருடையது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோண்டப்பட்ட இடம் இடுகாடு என்பதால், கிடைத்துள்ள எலும்புக் கூடுகள் நரபலி கொடுக்கப்பட்டவர்களுடையதா அல்லது அப்பகுதியில் கிராமத்தாரால் புதைக்கப்பட்டவர்களுடையதா என்பது விசாரணைக்குப் பின்னர் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications