'உயிரோடு இருக்க முடியாது...': கிரானைட் முறைகேட்டை விசாரிக்கும் சகாயத்துக்கு கொலை மிரட்டல்!
மதுரை: கிரானைட் குவாரியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயத்துக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 86 கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சென்னை ஹைகோர்ட்டு உத்தரவின்பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 3ம் தேதி முதல் சகாயம் கிரானைட் முறைகேடுகள் குறித்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகிறார். இதுவரை 200க்கும் மேற்பட்ட மனுக்கள் சகாயத்திடம் கொடுக்கப்பட்டுள்ளன. கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நிலங்களை இழந்த பொதுமக்கள், வீட்டுமனைகளை பறிகொடுத்த போலீசார் உள்ளிட்டோர் தங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 2ம் கட்ட விசாரணையை மதுரையில் நேற்று சகாயம் தொடங்கினார். நேற்றும் ஏராளமானோர் புகார் மனு அளித்தனர். நாளை முதல் கிரானைட் குவாரிகளில் நேரடி விசாரணையில் ஈடுபட உள்ளார் சகாயம்.
இந்நிலையில் நேற்று இரவு சகாயத்திற்கு கொலைமிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை எழுதியவர் ஈரோடு குமார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக்கடிதத்தில், ‘'கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இனி விசாரணை நடத்தக்கூடாது. மீறி ஏதாவது செய்தால் உயிருடன் இருக்க முடியாது'' என்று குறிப்பிடப்பட்டிந்தது. இக்கடிதத்தை மதுரை போலீஸ் கமிஷன சஞ்சய் மாத்தூரின் பார்வைக்கு அனுப்பிவைத்தார். அவர் அதைப்பார்த்துவிட்டு, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளர். மேலும் சகாயத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார்.
சகாயம் தனது விசாரணையை ஆரம்பித்த பிறகு அவ்வப்போது இதுபோன்ற மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications