கிரானைட் முறைகேடு- உண்மை அறிக்கை கொடுத்தால் கொலை செய்வோம்: சகாயத்துக்கு மிரட்டல்!
மதுரை: கிரானைட் முறைகேடுகளை குறித்த உண்மையான அறிக்கையை கொடுத்தால் டிசம்பர் மாதத்திற்குள் கொலை செய்வோம் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மதுரையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 8 கட்ட விசாரணையில் 500 புகார் மனுக்கள் வந்துள்ளன. மேலும் அவர் விசாரணை நடத்தக் கூடாது என்று மிரட்டல் கடிதங்களும் அடிக்கடி வருகின்றன.
இந்த நிலையில் 9ஆம் கட்ட விசாரணை நடத்த சகாயம் மதுரை வந்துள்ளார். அப்போது அவர் தனக்கு வந்த கடிதங்கள் அனைத்தையும் பிரித்து பார்வையிட்டார்.
டிசம்பருக்குள் கொல்வோம்
அதில் ஒரு கடிதத்தில், கிரானைட் விசாரணையின் உண்மையான அறிக்கையை கொடுக்கக் கூடாது. உண்மையான அறிக்கை கொடுத்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். எனவே உண்மையான அறிக்கைக்கு பதில் சாதாரண அறிக்கை கொடுக்க வேண்டும். அதை மீறி கொடுத்தால் டிசம்பர் மாதத்திற்குள் உங்களை கொலை செய்து விடுவோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் புகார்
இதைப் பார்த்த சகாயம் தனது அலுவலக உதவியாளர் மூலம் அந்த மொட்டை கடிதத்தை மாவட்ட ஆட்சியருக்குடம, போலீஸ் கமிஷனருக்கும் அனுப்பி புகார் கொடுத்தார்.
எழுதியது யார்?
இந்த கடிதத்தை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் கடிதம் மட்டும் சென்னையில் இருந்து வந்ததாக தெரியவருகிறது.இது குறித்து அவரிடம் கேட்ட போது எதுவும் கூற மறுத்து விட்டார்.
ரூ. 5 லட்சம் கோடி
கடந்த 12ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் சகாயம் அளித்த இடைநிலை அறிக்கையில் கிரானைட் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் ஐந்து லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என முதற்கட்டமாக மதிப்பிட்டிருக்கிறார்களாம்.
அனைவருக்கும் தொடர்பு
அதில் பல முன்னாள், இன்னாள் அமைச்சர்களுக்கும் பங்கு இருக்கிறது. வங்கிப் பரிவர்த்தனைகள், அரசு ஒதுக்கீடுகள், காவல் துறையின் கண்டுகொள்ளாமை என எங்கெங்கும் ஆதாரத்துடனே பல அத்துமீறல்கள் நடந்திருக்கின்றனவாம்.
மறைக்க முயலும் அரசு
கனிமவளக் கொள்ளை தொடர்பாக நடைபெற்றுள்ள முறைகேடுகளை மறைக்க பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களும் அரங்கேறுகின்றன. விசாரணையை முழுமையாக நடத்தவிடக் கூடாது என்பதில், ஆளும் கட்சியான அ.தி.மு.க மட்டும் அல்ல, தி.மு.க புள்ளிகளும் ஆர்வமாக உள்ளனர் என்பது கண்கூடாக தெரியவருகிறது. பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவு மட்டுமே கைகொடுக்கிறது சகாயம் குழுவினருக்கு...
9 கட்ட விசாரணையில் இன்னும் என்னென்ன பூதங்கள் வெளிவருகிறதோ பார்க்கலாம்.