30 ஏக்கர் நிலங்களில் கிரானைட் கற்களை குவித்துள்ள பி.ஆர்.பி கிரானைட்ஸ்: சகாயம் ஆய்வில் அதிர்ச்சி
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்டம் கீழவளவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்திற்குச் சொந்தமான குவாரியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
பஞ்சபாண்டவர் மலைப்பகுதியில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரையில் மூன்றாம் கட்ட விசாரணையை சகாயம் துவக்கியுள்ளார்.
நாள்தோறும் பல அதிர்ச்சிகரமான புகார்கள் அவரிடம் வந்தவண்ணம் உள்ளன. இதனிடையே சகாயம், இன்று நேரடியாக பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். 30 ஏக்கர் பரப்பளவில் பல ஆயிரக்கணக்கான கற்கள் எந்த ஒரு அனுமதியில்லாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விவசாய நிலங்களில் கற்கள்
இந்த கற்கள் அடிக்கி வைக்கப்பட்டதால் விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த பகுதியில் இருந்து செல்லக்கூடிய வண்டி பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் நேரடியாக சகாயத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலம் முழுவதும் பட்டா இடத்தில் தான் வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த குவாரிக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளை சகாயம் கடுமையாக எச்சரித்தார்.

காவல்துறையினர் புகார்
கிரானைட் குவாரி முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 315 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் மனுக்கள் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று 3 மனுக்கள் வந்தன. இதில் புதுதாமரைப்பட்டி ஜாங்கிட் நகரில் பிளாட் வாங்கிய காவல்துறையினர் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மனு அளித்தனர்.

காவலர் குடியிருப்பு
இக்குழுவைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். புதுத்தாமரைபட்டியில் கடந்த 2001 ம் ஆண்டு எங்களுக்காக 27 ஏக்கரில் 365 மனைகளில் அரசு காவலர் குடியிருப்புக்கென நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் 46 பேரின் இடங்களில் பி.ஆர்.பி.நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. கிரானைட் வெட்டியெடுப்பதற்காக அவர்கள் சக்தி வாய்ந்த வெடிமருந்துகளைக் கொண்டு பாறைகள் உடைக்கப் பயன்படுத்தியதால் பல வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன.

கொலை மிரட்டல்
இதுதொடர்பாக அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். அதன் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தும் அதை அவர்கள் ஏற்கவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மிரட்டல் விடுக்கின்றனர். கடந்த 14 வருடங்களாக இதே நிலை. பாதுகாப்பாக வீடுகட்டி வாழமுடியவில்லை " என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி.

14 வருடமாக தவிப்பு
சகாயம் மட்டும்தான் இப்போது எங்களது ஒரே நம்பிக்கை. எங்களது உழைப்பில் கிடைத்த இடம் திரும்ப எங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறோம் என்கின்றனர் இவர்கள்.
ஒவ்வொருவருக்கும் ஐந்தரை சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் சிலர் விற்பனை செய்து விட்டனர். ஆனால் எங்களைப் போன்றவர்கள் விற்பனை செய்யவும் முடியாமல், வீடும் கட்டவும் முடியாமல் 14 வருடமாக சிக்கலில் தவித்து வருவதாகவும் சகாயத்திடம் மனு அளித்துள்ளர்.
தோண்ட தோண்ட பூதங்களாக கிளம்புகின்றன. 30ஆம் தேதிக்குள் இன்னும் என்னென்ன புகார்கள் வரப்போகிறதோ?












Click it and Unblock the Notifications