கிரானைட் முறைகேடு: இறுதிக் கட்ட விசாரணையில் சகாயம்.. 10 நாளில் அறிக்கையை ரெடி செய்கிறார்
மதுரை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கிரானைட் முறைகேடு குறித்த இறுதி கட்ட ஆய்வை இன்று தொடங்க உள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளால் அரசுக்கு ரூபாய் 16 ஆயிரம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி இதுவரை 165 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.
இதன்பேரில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணையை தொடங்கிய சகாயம், தற்போது வரை 13 கட்டமாக விசாரணையை முடித்துள்ளார்.
1994 முதல் 2012ம் ஆண்டு வரை, குவாரிகளுக்காக அரசு நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் சகாயம் விசாரணைகள் நடத்தினார்.
அரசுத்துறைகள் வழங்கிய ஆவணங்களை சப்-கலெக்டர்கள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. கடந்த 6 மாதத்தில் சகாயம் இந்த ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
கிரானைட் குவாரிகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை போதுமானதா என்பதே ஹைகோர்ட்டின் கட்டளை. ஆனால் அதைவிட கூடுதலாக கிரானைட் குவாரியால் அந்தப்பகுயில் எந்த வகையான இயற்கை வளம் பாதிப்பு மற்றும் அழிப்பு, அதில் அரசு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதையும் சகாயம் அறிக்கையில் தெரிவிப்பார்.
இந்த நிலையில் விசாரணையின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் சகாயம் தனது 14வது கட்ட ஆய்வுப்பணியை இன்று தொடங்க உள்ளார். இன்னும் 10 நாளில் அவர் பணியை முடித்து அறிக்கையை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications