கிரானைட் முறைகேடு விசாரணை: ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு விளக்கம் கேட்டு சகாயம் மனு
சென்னை: கிரானைட் கனிமவள முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட உத்தரவுக்கு விளக்கம் கேட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், அவருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது, பின்னர் தமிழக அரசின் சார்பில் மறு சீராய்வு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலானது. அதனை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்ததுடன், 4 நாட்களுக்குள் சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த குழுவினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பாதுகாப்பையும் தமிழக அரசு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு, இந்த உத்தரவை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், கனிம வளத்துறைக்கும் அனுப்பி வைத்தது. சகாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள தமிழக அரசின் உத்தரவில், "தாது மணல் மற்றும் கிரானைட் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ளார்" என்பது தெளிவு படுத்தப்படவில்லை என்றும், தற்போது அறிவியல் நகர துணை தலைவராக இருக்கும் சகாயத்தை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கும் உத்தரவை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்கவில்லை என்றும் தெரிகிறது.
கனிமவளக் கொள்ளை பற்றி சகாயம் மதுரையில் மட்டும் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் அரசுத் தரப்பு உறுதியாக இருக்கிறது. ஆனால் சமூக ஆர்வலர்களும், சகாயமும், தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள கிரானைட், கனிமவள கொள்ளைகளை பற்றி விசாரிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனெனில் சகாயம் ஆட்சியராக இருந்தபோதே கிரானைட் கொள்ளை பற்றிய தோராய மதிப்பீட்டைச் சொல்லிவிட்டார். அடுத்து வந்த அன்சுல் மிஸ்ரா அனைத்தையும் கண்டுபிடித்து வழக்குகள் போட்டுவிட்டார். ஏராளமான வழக்குகள் மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. மொத்தத்தில் அந்த விவகாரம் முடிந்த மாதிரிதான். ஆனால், மற்ற மாவட்டங்களில்தான் விசாரணையே நடக்க வேண்டும்' என்று சொல்கிறார்கள்.
எனவேதான் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு விளக்கம் கேட்டு நேற்று மனுதாக்கல் செய்துள்ளார் சகாயம்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மதுரை மாவட்ட கனிம வள முறைகேடுகளைப் பற்றி மட்டும் விசாரணை நடத்த வேண்டுமா? அல்லது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் கனிம வளமுறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமா? என்றும், தான் விரும்பும் அதிகாரிகளை விசாரணை குழுவில் அனுமதி வழங்கக் கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், தமிழகம் முழுவதும் செயல்படும் குவாரிகளை ஆய்வு செய்வதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமனம் செய்கிறோம்.
அந்தக் குவாரிகளை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் மூலம் அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் அளவில் இருக்கின்றனவா? என்பதை நாங்கள் அறிய வேண்டும். இந்த நிலையில் இந்த விசயத்தை ஆய்வு செய்ய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய நாங்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications