திருநங்கை மீது ஆசிட் வீச்சு.. சேலத்தில் பரபரப்பு... வெள்ளிப்பட்டறை தொழிலாளிக்கு வலைவீச்சு!
சேலம்: சேலத்தில் திருநங்கை மீது ஆசிட் வீசிய வெள்ளிப்பட்டறைத் தொழிலாளியைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகில் உள்ள அல்லிக்குட்டை பகுதியில் வசித்து வந்தவர் அபி (23) என்ற திருநங்கை. 10-ம் வகுப்பு படித்துள்ள இவர் சேலம் மாவட்ட திருநங்கைகள் நல சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். எய்ட்ஸ் நோய் குறித்தும், பாலியல் தொல்லை குறித்தும் அபி விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
அபி அதே பகுதியை சேர்ந்த பிரபு (32) என்ற வெள்ளிப்பட்டறைத் தொழிலாளியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். பிரபு அடிக்கடி அபியிடம் இருந்து பணம் கேட்டு தொல்லை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிரபு மீது வெறுப்படைந்த அபி, நேற்று மாலை அவரது வீட்டிற்குச் சென்று பிரபுவின் பெற்றோரிடம் இது தொடர்பாக புகார் செய்துள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட பிரபு அபியிடம் சண்டை போட்டுள்ளார். பதிலுக்கு அபியும் சத்தம் போட்டுள்ளார். இதனால் அபி மீது கடும் கோபமடைந்த பிரபு, தனது வெள்ளிப்பட்டறையில் இருந்த ஆசிட்டை எடுத்து அபியின் மீது ஊற்றினார்.
இதில் ஆசிட் அபியின் தலையின் பின்பகுதி, மார்பு பகுதி, மற்றும் கையில் பட்டு வெந்து போனது. அபியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், இது தொடர்பாக மற்ற திருநங்கைகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து வந்த திருநங்கைகள் அபியை ஆட்டோவில் ஏற்றி சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தை இன்று காலை அறிந்த சேலம் மாவட்ட திருநங்கைகள் நல சங்க தலைவர் கோபிகா, ராதிகா, பூஜா, ரசிகா மற்றும் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இவர்களை டாக்டர்களும், நர்சுகளும் அமைதிப்படுத்தினர். இதன் பின்னர் அபியை மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று திருநங்கைகள் சேர்த்தனர்.
இந்த சம்பவம் கூறித்து திருநங்கைகள் கோபிகா, பூஜா ஆகியோர் கூறுகையில், ‘அபியும் பிரபுவும் நெருங்கி பழகி வந்தனர். பிரபு அடிக்கடி அபியுடம் பணம் கேட்டு மிரட்டி வந்தார். ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் அவ்வப்போது கொடுத்து அபி உதவி செய்து வந்தார். இந்த பணம் போதாமல் பிரபு மேலும் பணம் கேட்டு ‘டார்ச்சர்' செய்து வந்துள்ளார். இது பற்றி பிரபுவின் பெற்றோரிடம் தெரிவிக்க அபி சென்ற போது தான் அவள் மீது பிரபு ஆசிட் கொட்டி உள்ளார். இவரை போலீசார் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இந்த சம்பவத்தை அறிந்த சேலம் அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன் முழு விசாரணை நடத்த வீராணம் போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, ‘திருநங்கையின் மீது ஆசிட் வீசியது குறித்து இன்னும் புகார் வரவில்லை. இருப்பினும் விசாரிக்க உத்தரவிட்டு இருக்கிறோம். திருநங்கையின் மீது பிரபு ஏன் ஆசிட் ஊற்றினார்? என விசாரித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரபுவை தேடி வருகிறோம்' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications