சேலம்-சென்னை 8 வழிசாலை: விளைநிலத்தை அளக்க எதிர்ப்பு.. விவசாயி குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது
தங்களது நிலத்தை அளக்க வந்தமைக்காக எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்: 8 வழிசாலை திட்டத்துக்காக, தங்களது நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டனர்.
சேலம் - சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். சேலத்திலிருந்து அரூர், செங்கம், திருவண்ணாமலை வழியாக தாம்பரம் முதன்மை சாலையை அடையும் வகையில் இந்த புதிய 8 வழி சாலை அமைக்கப்படவிருக்கிறது. இதற்காக சேலம் எருமாபாளையம், ஜருகுமலை, சன்னியாசிகுண்டு, நிலவாரப்பட்டி, அடிமலைபுதூர், பனமரத்துப்பட்டி, கஞ்சமலை, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய 8 வழி சாலை அமைப்பதற்காக காடுகளை அழிப்பதற்கும், மலைகளை குடைவதற்கும் வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்திவிட்டால் தங்களது வாழ்வாதாமே பாழாகிவிடும் என்று கூறும் விவசாயிகள், இந்த 8 வழி பசுமை சாலையால் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறி இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அடிமலைபுதூர் பகுதியில் நிலம் அளக்க இன்று அதிகாரிகள் வந்தனர். இதனால் கிராம மக்கள் அப்பகுதியில் நிலம் அளக்க கூடாது என கேட்டுக் கொண்டனர். எனினும் அதிகாரிகள், தொடர்ந்து நிலம் அளக்க முயன்றனர். அவர்கள் அளவீடு செய்ய வந்த நிலம், அங்கு வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பவருடையது என்று கூறப்படுகிறது. இதனால் ரவிச்சந்திரன் குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் எதிர்ப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதனையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications