காவிரி ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது- ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை
காவிரி ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என்று ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம்: காவிரி ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என்று ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் கனமழை கொட்டியதால் கேஆர்எஸ் அணை நிரம்பியது. இதையடுத்து கபினி அணைக்கு நீர் திறந்துவிடப்பட்டது.
பின்னர் கபிணி அணையிலிருந்து மேட்டூருக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை 117 அடியை எட்டியுள்ளது. இன்றைய தினம் முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது.
கல்லணைக்கு வருகை
இதனால் கடந்த 19-ஆம் தேதி முதல் மேட்டூரில் இருந்து விவசாயத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டது. தண்ணீர் வரத்து காரணமாக கல்லணைக்கும் நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் காவிரி நீர் பாய்ந்து வருகிறது.
4 பேர் சடலம்
இந்நிலையில் ரெட்டியூரில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய 6 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவரை மட்டும் உயிருடன் மீட்டனர். இதையடுத்து 5 பேரில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இறங்கவோ கூடாது
மீட்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக ரெட்டியூருக்கு சேலம் ஆட்சியர் ரோகிணி வருகை தந்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி ஆற்றில் யாரும் இறங்கவோ குளிக்கவோ கூடாது.
வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி ஆற்றின் அருகே நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலவச தொலைபேசி எண்
அணையிலிருந்து தற்போது 20,000 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இரவு 8 மணியளவில் இது 30,000 ஆயிரம் கனஅடியாக உயரும். எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெள்ள அபாயம் தொடர்பான உதவிக்கு 1077 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் ரோகிணி.