வேலூர், சேலத்தில் அனல்காற்று... மதுரை, விருதுநகரில் சூறைக்காற்று - வானிலை எச்சரிக்கை
சேலம், வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சேலம், வேலூர், தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கடந்த 2 வாரங்களாக பல மாவட்டங்களிலும் 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
வெப்பநிலை
திருத்தணியில் அதிகபட்சமாக 113 டிகிரி வரை பதிவாகியுள்ளது. வேலூரில் 110 டிகிரி வெப்பம் பதிவானது. சென்னையில் நூற்றாண்டிலேயே இல்லாத வெப்ப அளவாக 109 டிகிரி பாரன்ஹீட் கடந்த வாரம் பதிவானது.
திருத்தணியில் திகு திகு
இன்று சென்னையில் காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. 98 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. சேலத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது. திருச்சியில் 105 டிகிரியும், மதுரையில் 105 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.
அனல் காற்று எச்சரிக்கை
வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தாலும் அனலின் வேகம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் மாவட்டங்களில் கடுமையான அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 மாவட்டங்களிலும் வெளியில் செல்லும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.
சூறைக்காற்று வீசும்
இதே போல மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சூறைக்காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் அனல் காற்று, தென் மாவட்டங்களில் சூறைக்காற்று என வானிலை மாற்றத்தினால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.