க்வேக்கர் ஓட்ஸ் பாக்கெட்டில் நெளிந்த புழுக்கள்... உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் பெண் புகார்
சேலம் : பிரபல பல்பொருள் அங்காடியில் வாங்கிய குவேக்கர் ஓட்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் நெளிந்ததையடுத்து அதனை வாங்கிய பெண் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
பால் பொருட்களில் புழு, பிஸ்கட் பாக்கெட்டில் பல்லி என அவ்வப்போது அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது க்வேக்கர் ஓட்ஸ் பாக்கெட்டில் புழு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
சேலம் பட்டை கோவில் பகுதியை சேர்ந்த சங்கீதா, அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் குவேக்கர் ஓட்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர், அந்த பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது, ஓட்ஸில் ஏராளமான புழுக்கள் நெளிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடந்த ஜூன் மாதம் தயாரிப்பு தேதி இடப்பட்டிருந்த அந்த பாக்கெட்டில் புழு இருந்தது பற்றி கடைக்காரரிடம் தெரிவித்தபோது முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடம் சங்கீதா புகார் அளித்தார். ஓட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அந்த புகாரில் வலியுறுத்தியுள்ளார்.