ஜெயலலிதாவின் கூட்டத்திற்கு சென்று பரிதாபமாக பலியான சலூன் கடைக்காரர்
அரியலூர்: விருத்தாச்சலத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட கூட்டத்திற்கு சென்ற சலூன் கடைக்காரர் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பரிதாபமாக பலியானார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவர் ஜெயங்கொண்டம் பகுதியில் சலூன் கடை வைத்திருந்தார். விருத்தாச்சலத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு ராதாகிருஷ்ணன் சென்றார்.

கூட்டத்திற்கு சென்ற இடத்தில் அவர் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் நிலைமை மோசமாக உள்ளதாகக் கூறி அவரை மேல் சிகிச்சைக்காக முண்டியங்காடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதாக கூறப்படுகின்றது. முதல்வரின் பொதுக்கூட்டத்திற்க்கு சென்ற தொண்டர் ஒருவர் உயிரிழந்த இச்சம்பவம் அதிமுக மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலில் பொதுக்கூட்டம் நடத்தியதற்கு ஜெயலலிதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications